செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்
புதிய இணைப்பு
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் (27) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மேலும் எலும்புக்கூடுகள் அப்பகுதிகளில் காணப்படுவதால் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், அதற்காக 08 வார கால பகுதி தேவை என சட்ட வைத்திய அதிகாரி மன்றில் விண்ணப்பம் செய்ததற்கு அமைவாக நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டது.

இந்தநிலையில் பருவமழை மற்றும் காலநிலை சீரின்மை காரணமாக மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டதுடன் , புதைகுழிக்குள் மழை வெள்ளமும் நிறைந்து காணப்பட்டது.
இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 45 நாட்கள் முன்னெடுக்கப்பட்டு, செப்டெம்பர் 06ஆம் திகதியுடன் நிறைவு பெற்ற நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்போது சுமார் 08 மாத கால பகுதிக்கு பின்னர் மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக 2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி, நிதியமைச்சினால் விடுவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - த.பிரதீபன்
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் - செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதன்படி, இந்த அகழ்வுப் பணிகள் இன்று (27.04.2026) மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்பகுதியில் மேலும் எலும்புக்கூடுகள் காணப்படுவதால் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என சட்ட வைத்திய அதிகாரி மன்றில் விண்ணப்பம் செய்திருந்த நிலையில் அகழ்வுப் பணிக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளமையைத் தொடர்ந்து அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
அகழ்வுப் பணிகள்
செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரையில் 240 மனித என்பு கூட்டுத் தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவற்றுள் 239 மனித என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 45 நாட்கள் முன்னெடுக்கப்பட்டு, செப்டெம்பர் 06 ஆம் திகதியுடன் நிறைவு பெற்றிருந்தது.
இந்தநிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் சுமார் 08 மாதங்களின் பின்னர் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 7 மணி நேரம் முன்