அமெரிக்க ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களுக்குச் செக் வைத்த சீனா !
அமெரிக்காவின் 20 பாதுகாப்பு நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது.
தைவானுக்கு ஆயுதங்கள் விற்க ஒப்பந்தம் போட்டதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தைவானை தன்வசப்படுத்த சீனா முயற்சித்து வரும் நிலையில் அதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
அதிரடியாக தடை
இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை நீடித்து வருகின்றது.
இந்தநிலையில், சீனாவின் எதிர்ப்பை மீறி 99,822 கோடி ரூபாய் மதிப்பில் தைவானுக்கு ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்பந்தம் போட்டுள்ளது.

இதையடுத்து சீனா, அமெரிக்காவில் உள்ள ஆயுத தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த 20 நிறுவனங்களுக்கு அதிரடியாக தடை விதித்துள்ளது.
அத்தோடு, அந்நிறுவனங்களைச் சேர்ந்த பத்து உயரதிகாரிகளுக்கும் சீனா தடை விதித்துள்ளது.
ஆத்திரமூட்டும் செயல்
இது தொடர்பில் சீன வெளியுறவு அமைச்சகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தைவான் பிரச்சினையில் ஆத்திரமூட்டும் செயல்களை செய்ய முயற்சிக்கும் எவருக்கும் சீனாவின் உறுதியான பதில் வழங்கப்படும்.

ஒரே சீனா என்ற கொள்கையை அமெரிக்கா கடைப்பிடிக்க வேண்டும். தைவானுக்கு ஆயுதம் வழங்கும் ஆபத்தான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது தடை செய்யப்பட்டுள்ள 20 நிறுவனங்களில் பெரும்பாலானவை சீனாவுடன் வர்த்தகம் செய்யவில்லை எனவே இந்த தடை என்பது அமெரிக்காவிற்கு எச்சரிக்கையாகவே கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |