செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது சீன விண்கலம்
சீனா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய தியான்வென்-1 ரோவர் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.
செவ்வாய்கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்புக் குறித்து இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது.
செவ்வாய்கிரகம் தொடர்பான படங்களை எடுக்கவும் இதில் கமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த தியான்வென்-1 ரோவர் விண்கலத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஐந்து கருவிகள், செவ்வாய் கிரகத்தின் பாறை தன்மைகள், நீர் ஆகியவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றன.
ஏற்கனவே சீனா விண்வெளிக்கு வீரர்களை அனுப்பியுள்ளது. அதே போல நிலவை ஆய்வு செய்வதற்கும் விண்கலங்களை அனுப்பி அதில் வெற்றி கண்டுள்ளது.
இந்நிலையில் தற்போது சீன விண்கலம் ஒன்று செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியிருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாக கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 240 கிலோ எடை கொண்ட 6 சக்கரங்களைக் கொண்ட ரோவர் கருவியுடன் அனுப்பப்பட்ட இந்த விண்கலம், கடந்த கடந்த பெப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.