மகிந்தவுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு நாளையுடன் நிறைவு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான சத்தியக்கடதாசியை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (10) நிறைவடைவதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்தநிலையில் குறித்த காலப்பகுதிக்குள் சத்தியக்கடதாசி சமர்ப்பிக்கப்படத் தவறினால் அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
2015ஆம் ஆண்டுக்குரிய அவரது சொத்து விபரங்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, இந்த ஆவணங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊழல் எதிர்ப்புச் சட்டம்
கடந்த மாதம் 23ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்தின் மூலம், 14 நாட்களுக்குள் சொத்து விபரங்கள், வருடாந்த செலவினங்கள், வருமான ஆதாரங்கள் ஆகிய விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டிருந்தது.
இதுவரை குறித்த சத்தியக்கடதாசி சமர்ப்பிக்கப்படாத நிலையில், வழங்கப்பட்ட கால அவகாசத்தை எக்காரணம் கொண்டும் நீடிக்கப் போவதில்லை எனவும் நாளைய தினத்திற்குள் (10) இந்த விபரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது இறுதி அறிவித்தல் எனவும் ஆணைக்குழு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த காலப்பகுதிக்குள் சத்தியக்கடதாசி சமர்ப்பிக்கப்படத் தவறினால், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் (Anti-Corruption Act) விதிமுறைகளுக்கு இணங்க, அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சட்ட ரீதியான கடப்பாடுகளை நிறைவேற்றுவது விசாரணைகளின் வெளிப்படைத்தன்மைக்கு அவசியமானது என ஆணைக்குழுவின் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |