பசிலின் நகர்வு! பிளவுபடும் நிலையில் மொட்டுக் கட்சி
பசிலின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு
இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாவதை தடுக்கும் ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்சவுக்கு ஆதரவானவர்கள் எதிர்க்கின்ற காரணத்தால் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி இரண்டாக பிளவுபடும் நிலையில் உள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு இல்லாமல் ஆக்கப்படுவது சம்பந்தமாக பொதுஜன பெரமுனவை சேர்ந்த சிலர் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பசிலின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதேவேளை, ஒரு சிலரை குறி வைக்கும் நோக்கில் அரசியலமைப்புத் திருத்தச் சட்டங்களை கொண்டு வரக் கூடாது என அவர்கள் கூறி வருகின்றனர்.
21வது திருத்தம் தொடர்பாக கலந்துரையாட கோட்டாபய அழைப்பு
இவ்வாறான நிலைமையில், இதனிடையே 21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக கலந்துரையாட எதிர்வரும் திங்கள் கிழமை ஜனாதிபதி மாளிகைக்கு வருமாறு கோட்டாபய ராஜபக்ச, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், புதிய திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பெரும்பாலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தாலும் மேலும் சிலர் எதிராக வாக்களிக்கலாம் அல்லது வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாது தவிர்க்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பாக அந்த கட்சிக்குள் முரண்பட்ட கருத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால், அது கட்சி பிளவுப்படும் அளவுக்கு செல்லக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.