வெளிநாடொன்றை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்: புதைந்துள்ள மக்கள் - அவசர நிலை பிரகடனம்
கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டு ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லா (Abelardo de la Espriella) நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
தேசிய அவசரநிலையை அறிவித்த பின்னர், உள்ளூர் நேரப்படி பிற்பகல் சுமார் 1 மணியளவில் ஆற்றிய நாட்டு மக்களுக்கான உரையில் அவர் “உயிர்களைப் பாதுகாக்கவும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவவும் தேவைப்படும் இடங்களில் நிவாரண உதவிகளை வழங்கவும் தேசிய அரசாங்கம் தனது அனைத்துத் திறன்களையும் பயன்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
கொலம்பியாவின் சோகோ மாகாணத்தில் 103 கிலோமீற்றர் (64 மைல்) ஆழத்தில், உள்ளூர் நேரப்படி நேற்று காலை 07:34 க்கு 7.4 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக அந்த நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை
இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 132 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொலம்பியாவின் கோபி உற்பத்தி பிராந்தியத்தில் அமைந்துள்ள பெரெய்ரா (Pereira) நகரத்தில் அதிக அளவிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதனைத் தவிர சுற்றியுள்ள நகரங்களும், 'வேலே டெல் கௌகா' (Valle del Cauca) பிராந்தியமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், போகோட்டா மற்றும் மெடலின் ஆகிய நகரங்களில் இருந்து சிறப்புப் பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். கட்டடங்களின் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அத்துடன், இந்த நிலநடுக்கத்தில் 570க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், 1,500க்கும் மேற்பட்ட வீடுகளும், பல பிராந்திய வானூர்தி நிலையங்களும் சேதமடைந்துள்ளன.
பாதுகாப்பு கருதி பெரெய்ரா, மனிசாலேஸ், கிப்தோ, ஆர்மீனியா, கார்தாகோ மற்றும் புவேனவென்ச்சுரா ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |