கொலம்பியாவை உலுக்கிய நிலநடுக்கம்...! 111 பேர் பலி - நூற்றுக்கணக்கானோர் படுகாயம்
🛑 புதிய இணைப்பு
கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்ப்ரிலா (Abelardo De La Espriella) அதிகாரப்பூர்வமாக இதனை அறிவித்துள்ளார்.
மேலும், இந்நிலநடுக்கத்தில் காயமடைந்த குறைந்தது 87 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
🛑 முதலாம் இணைப்பு
கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவான இந்த அதிநவீன நிலநடுக்கம் காரணமாக காளி (Cali), பெரேரா (Pereira) மற்றும் மணிசாலேஸ் (Manizales) ஆகிய முக்கிய நகரங்களில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்து பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
பெரிய சேதங்கள்
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவல்படி, கொலம்பியத் தலைநகர் பொகோடாவிற்கு மேற்கே சுமார் 400 கி.மீ தொலைவில் உள்ள சொகோ (Chocó) பிராந்தியத்தின் சான் ஜோஸ் டெல் பால்மர் (San Jose Del Palmar) பகுதியில் 107 கி.மீ ஆழத்தில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

இந்நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ஈக்வடார், வெனிசுலா மற்றும் பனாமா ஆகிய அண்டை நாடுகளிலும் உணரப்பட்டபோதிலும், அங்கு பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை.
ரிசாரால்டா (Risaralda) மாகாணத்தில் 40 பேரும், வாலே டெல் காவுக்கா (Valle del Cauca) மாகாணத்தில் 27 பேரும், மணிசாலேஸ் நகரில் 2 பேரும் பலியாகியுள்ளனர்.
அவசரகால நிவாரணம்
பலியானவர்களில் மூன்று சிறுவர்களும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மணிசாலேஸ் நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நோஸ்ட்ரா செனோரா டெல் ரொசாரியோ (Nuestra Senora del Rosario) பேராலயத்தின் ஒரு கோபுரம் இடிந்து விழுந்து பலத்த சேதமடைந்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிசாலேஸ், பெரேரா, குய்ப்டோ, அர்மேனியா, கார்டாகோ மற்றும் புவேனவென்டுரா ஆகிய 6 முக்கிய நகரங்களின் விமான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

கட்டடங்களின் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால், உள்ளூர் மக்களும் அவசரகால மீட்புக் குழுவினரும் இணைந்து மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
புதிதாகப் பதவியேற்ற கொலம்பிய ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்ப்ரிலா (Abelardo de la Espriella), நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று அவசரகால நிவாரண மற்றும் மீட்புப் பணிகளை நேரடியாக மேற்பார்வையிட உள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |