கொழும்பு - பதுளை இடையிலான தொடருந்து சேவைகள் ஸ்தம்பிதம்!
தொடருந்து பாதையின் மீது பாறை சரிந்து வீழ்ந்ததில் கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற தொடருந்து இடையில் ஸ்தம்பித்து நிற்பதாக தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு புறக்கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்த இரவு அஞ்சல் தொடருந்தே ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ தொடருந்து நிலையங்களுக்கு இடையில் இன்று காலை தொடருந்தின் மீதும் தொடருந்து பாதையின் மீதும் பாறை சரிந்து வீழ்ந்தமையினால் தேக்கமடைந்துள்ளது.
ஹப்புத்தளை தொடருந்து நிலையத்தின் 156/13 மைல் தண்டவாளத்தினைக் கடக்கும் போதே தொடருந்து சிக்கிக்கொண்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இயந்திரம் பழுதடைந்துள்ளது
இரண்டு இயந்திரங்களைக் கொண்டு இயங்கும் இந்த தொடருந்தில் முன்பக்க இயந்திரத்தின் மீது பாறை விழுந்ததனால் குறித்த இயந்திரம் பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடருந்தின் ஏனைய பெட்டிகளை மற்றைய இயந்திரத்தின் உதவியுடன் மீண்டும் ஹப்புத்தளை தொடருந்து நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இந்த இரவு அஞ்சல் தொடருந்தானது ஹப்புத்தளை தொடருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிஷ்டவசமாக இந்த விபத்தின் காரணமாக யாருக்கும் எந்த காயமோ, சேதமோ ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தொடருந்து சேவைகள் தடைப்பட்டுள்ளது
ஹப்புத்தளை நிலையத்தில் இறங்கியிருக்கும் பயணிகளுக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், தொடருந்து இயந்திரத்தினை அகற்றுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், பதுளையில் இருந்து இன்று (17) காலை 5.45 மணிக்கு புறப்பட்ட உதரட மெனிகே தொடருந்து தற்போது பண்டாரவளை தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி இந்தச் சம்பவம் காரணமாக பதுளைக்கும் கொழும்புக்கும் இடையிலான மலையக தொடருந்து சேவைகள் அனைத்தும் தடைப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
