நல்லூர் திருவிழாவை முன்னிட்டு தினசரி தொடருந்து சேவை - பறந்த கோரிக்கை
கொழும்பு (Colombo) - காங்கேசன்துறை விரைவு தொடருந்து சேவையை வாரத்திற்கு நான்கு நாள்களாகக் குறைக்கும் அரசின் தீர்மானத்தை உடனடியாக மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ காலப் பகுதியில் கொழும்பு - காங்கேசன்துறை தொடருந்து சேவையை மீண்டும் தினசரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அழுத்தம் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் அக்கட்சியின் அரசியல் சபை உறுப்பினருமான கீதநாத் காசிலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியிருக்கின்றார்.
பயணிகளுக்கு தேவையற்ற சிரமங்கள்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 'வருடாந்தம் நடைபெறும் நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வடக்கிற்கு வரவிருக்கும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமற்றது.

வடக்கிற்கான தொடருந்து சேவையை வலுப்படுத்த வேண்டிய நேரத்தில் அதைக் குறைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
வட மாகாணத்திற்கு பயணிக்கும் மக்கள் நீண்ட காலமாகவே போதிய தொடருந்து சேவையின்மையாலும் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யாத தொடருந்து சேவை கால அட்டவணையாலும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்தப் பிரச்சினைகள் குறித்து நாம் பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து, தற்போதைய தொடருந்து அட்டவணையில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளோம்.
ஆனால் அந்தக் குறைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அரசு தற்போது சேவைகளை மேலும் குறைத்து தினசரி தொடருந்தை நம்பியிருக்கும் பயணிகள், மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் மற்றும் குடும்பங்களுக்கு தேவையற்ற சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஏன் தீர்வு காணப்படவில்லை
தொடருந்து பெட்டிகள் பற்றாக்குறையே இதற்கான காரணம் எனக் கூறப்படுவது புதிய விடயமல்ல. இந்தப் பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வந்திருந்தால், வடககில் ஆண்டின் மிக அதிக பயணிகள் நெரிசல் காணப்படும் நல்லூர் கந்த சுவாமி ஆலய மகோற்சவத்திற்கு முன்னரே அதற்கு ஏன் தீர்வு காணப்படவில்லை?

மேலும், இந்த முடிவு உண்மையில் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதா, அல்லது தனியார் பஸ் உரிமையாளர்களின் நலனுக்கு சாதகமாக அமையும் வகையில் எடுக்கப்பட்டதா என்ற நியாயமான சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மலிவானதும் நம்பகமானதுமான தொடருந்து சேவையை நம்பி யிருக்கும் நிலையில், அந்த சேவையை குறைப்பது யாருடைய நலனைப் பாதுகாக்கிறது என்பதை அரசு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
பொதுப் போக்குவரத்துக் கொள்கைகள் சிலரின் வர்த்தக நலனுக்காக அல்ல, மக்களின் நலனையும் வசதியையும் முன்னிறுத்தியே அமைய வேண்டும்.
தொடருந்து பற்றாக்குறை
குறிப்பாக நல்லூர் திருவிழா போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மத நிகழ்வுகள் நடைபெறும் காலங்களில், மக்களின் பயண வசதியை உறுதி செய்வதே அரசின் பொறுப்பாகும்.

எனவே, அரசு மற்றும் போக்குவரத்து அமைச்சு இந்த முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்து, நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ காலப் பகுதியில் கொழும்பு - காங்கேசன்துறை தொடருந்து சேவையை மீண்டும் தினசரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேவேளை, வடக்கு தொடருந்து மார்க்கத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் தொடருந்து பற்றாக்குறையை தீர்ப்பதற்கான தௌpவான செயற் திட்டத்தையும் மக்களுக்கு முன்வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இலங்கை அரகலய சதுரங்கத்தில் மகிந்தவின் அரசியலை உருமாற்றிய 121 நாட்கள் 52 நிமிடங்கள் முன்