துறைமுக நகர் ராஜபக்ஸ குடும்பத்தின் சொத்தல்ல நாட்டு மக்களின் சொத்து!
துறைமுக நகர் ராஜபக்ஸ குடும்பத்தின் சொத்தல்ல என திருகோணமலை மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
தற்போது கொவிட்19 தொற்று வேகமாக பரவி வருகின்றது நாளொன்றுக்கு இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட தொற்றாளர்களும் அண்ணளவாக முப்பது மரணங்களும் பதிவாகின்ற நிலையில் அரசாங்கம் அவசர அவசரமாக இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற முயற்சிக்கின்றது. அதனால் கடந்தவாரம் முடக்கப்பட்ட நாட்டை இந்தவாரம் திறந்து அடுத்தவாரம் மீண்டும் முடக்கவுள்ளனர்.
தேசிய சொத்துக்களை பாதுகாப்போம் என 69 இலட்சம் வாக்குகளை பெற்றுக்கொண்ட அரசாங்கம் இச் சட்டமூலம் ஊடாக துறைமுக நகரத்தை சீனாவுக்கு அடகு வைக்க முயற்சிக்கிறது. அவர்கள் நினைத்தது போல் இதை வழங்க துறைமுக நகர் ராஜபக்ஸ குடும்பத்தின் சொத்தல்ல. இது இந்நாட்டு மக்களின் சொத்து.
இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இந்நகரின் பயனை எமது பிள்ளைகள் மட்டுமல்ல அவர்களின் பிள்ளைகளும் அனுபவிக்க முடியாது. ஐக்கிய மக்கள் சக்தியாக நாம் துறைமுக நகரத்துக்கு எதிர்ப்பல்ல. அந்த அபிவிருத்தியை நாங்கள் விரும்புகிறோம். ஆனால் இந்த சட்டமூலத்தில் சில சரத்துக்களுக்கே நாங்கள் எதிர்ப்பை வெளியிடுகிறோம்.
இச்சட்டமூலத்தின் சில சரத்துக்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவ்வாறு வாக்கெடுப்பு நடத்தப்படுமானால் அது ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் குறிப்பிட்டே வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அப்பொழுதுதான் மக்களுக்கு யார் தேச பற்றாளர்கள் யார் தேச துரோகிகள் என தெரியவரும் என மேலும் தெரிவித்தார்.