அரசாங்கத்திற்குள் பாரிய அதிர்வு! முக்கிய அறிவிப்பை விடுக்க தயாராகும் கோட்டாபய
இலங்கை அரசாங்கத்திற்குள் பாரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ள போர்ட் சிட்டி என்ற கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துடன் தொடர்புடைய உத்தேச சட்டமூலம் குறித்து தெளிவுபடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தயாராகியுள்ளார்.
இதற்காக ஆளும் கட்சிலுள்ள அனைத்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை நாளைய தினம் ஜனாதிபதி அழைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் வரைபடத்தை மாற்றியமைத்த கொழும்பு துறைமுக நகரத்திட்டம் சார்ந்த ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு அதன் சட்டமூலமும் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டால் இலங்கைக்குள் இன்னுமொரு தனிநாடு உருவாகக் கூடிய அபாயம் இருப்பதாக முன்னணி பௌத்த தேரர்கள் மட்டுமன்றி ஆளும் கட்சியிலுள்ள சில அரசியல்வாதிகளும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
ஏற்கனவே 20ஆவது திருத்தம், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனை உள்ளிட்ட விவகாரத்தினால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள், தற்போது போர்ட் சிட்டி உத்தேச ஆணைக்குழுச் சட்டமூலம் காரணமாக மேலும் விரிசல் நிலையை அடைந்துள்ளது.
இந்தத் திட்டத்திற்கு எதிராக கருத்து வெளியிட்ட ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்சவை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தொலைபேசியில் அச்சுறுத்திய சம்பவமும் கடந்த வாரம் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் போர்ட் சிட்டி தொடர்பான உத்தேச சட்டமூலம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதுகுறித்த முக்கிய அறிவிப்பை விடுப்பதற்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தயாராகி வருகின்றார்.
இதற்காக நாளைய தினம் பிற்பகல் 02 மணிக்கு ஆளும் கட்சியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை ஜனாதிபதி செயலகத்திற்கு அவர் அழைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆளும் கட்சியிலுள்ள அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுகுறித்த தகவலை ஜனாதிபதி செயலகம் இன்று வழங்கியிருக்கின்றது.