சர்வதேச நீதிமன்றத்தை நாடவுள்ள பேராயர்! நாட்டின் தலைவர்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலுடன் பொறுப்புடையவர்களுக்கு எதிராக இலங்கையில் சட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால், சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாகவேனும் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க தயங்கப்போவதில்லையென கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விடயத்தை சர்வதேசத்திற்கு கொண்டு செல்லாத வகையில் நியாயமான தீர்வை வழங்க ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எனக்கு இதுவரை கிடைக்கவில்லை. விசாரணைகளில் குறைபாடுகள் காணப்படுகின்றன.
அந்த குறைபாடுகளை நிவர்த்திக்கும் வகையில் சில செயற்பாடுகளை நான் திட்டமிட்டுள்ளேன்.
எவ்வாறெனினும் சில விடயங்களின் உண்மைத் தன்மையை நாம் தேடியறிந்துகொள்ள வேண்டும்.
ஆகவே குறித்த அறிக்கையின் பிரதி ஒன்றை தந்துதவுமாறு நாம் கேட்கின்றோம். அவ்வாறான நிலையில் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு நாங்கள் பதிலளிக்க முடியும்.
இந்தப் பிரச்சினைக்கு ஏதாவது ஒரு பதிலை வழங்குவேன் என இதில் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் பணத்தையோ, பொருளையோ எதிர்பார்க்கவில்லை. தற்கொலைதாரிகள் எங்களை இலக்கு வைத்து ஏன் தாக்குதல் நடத்தினார்கள் என்ற விடயத்தை அறிந்துகொள்ளவே விரும்புகின்றார்கள்.
அவர்கள் இனியும் பொறுமை காக்கமாட்டார்கள். அரசாங்கத்தின் ஊடாகவும், ஆணைக்குழுவின் ஊடாகவும் நியாயமான தீர்வு கிடைக்காவிடின் வேறு தீர்மானத்தை எடுக்க வேண்டியேற்படும்.
சர்வதேச நீதிமன்றத்தை நாடி நாம் தீர்வினைப் பெற்றுக்கொள்வோம். அதற்கு நாம் தயார். எனினும் அவ்வாறான ஒரு விடயம் இடம்பெற எமது தலைவர்கள் இடமளிக்கமாட்டார்கள் என நம்புகின்றோம்.
காரணம் தற்போதைய சூழ்நிலையில் இந்த நாட்டின் பிரச்சினையில் சர்வதேச நீதிமன்றத்தில் தலையீடு ஓரளவேனும் காணப்படுகிறதல்லவா? அது பிரச்சினையாக மாறியுள்ளதல்லவா? ஆகவே மீண்டும் பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்ளமாட்டார்கள் என எதிர்பார்க்கின்றேன்.
ஆகவே இந்த அறிக்கையூடாக எமக்கு சாதகமான பதில் கிடைக்குமென நாம் நினைக்கின்றோம். அதன் பின்னர் இடம்பெறும் வழக்கு விசாரணைகளிலும் அது தங்கியுள்ளது.
அரசாங்கத்தின் செயற்பாடுகளில் முதலில் அவதானம் செலுத்தி, அதன் பின்னர் சர்வதேச அமைப்புகள் ஊடாக நியாயத்தை பெற்றுக்கொள்ள முயற்சிப்போம்.
எமது மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும்.
அதனைவிட இந்த அனர்த்தம் தொடர்பில் அறிந்தும் அதனைத் தடுக்கத் தவறிய அரசியல் பிரமுகர்கள், நிறுவனத் தலைவர்கள் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும். இதனைத் தடுத்திருக்க முடியும்.
பாதுகாப்புப் படையினரை பயன்படுத்தி இதனை தடுத்திருக்க முடியும். குற்றப்புலனாய்வுப் பிரிவு இது தொடர்பிலான விசாரணைகளை சரியாக மேற்கொண்டமை குறித்து எனக்குத திருப்திகொள்ள முடியாமல் உள்ளது. அந்த விசாரணைகள் ஏதோ கடமைக்கு மேற்கொள்ளப்பட்டதாகவே எனக்குத் தோன்றுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.