திருவள்ளுவர் மத்திய நிலையம் யாழ் மாநகரசபைக்கே உரியது! எடுக்கப்பட்ட தீர்மானம்
யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் முழுமையான நிர்வாக அதிகாரம் மாநகர சபையிடமே இருக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று (14.05.2026) முதல்வர் மதிவதனி தலைமையில் நடைபெற்றபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
அமர்வில் பல்வேறு விடயங்கள் விவாதிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்துக்காக மத்திய அரசால் உருவாக்கப்படவுள்ள நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (Trust Fund) தொடர்பில் அதிருப்தி தெரிவித்து யோகேஸ்வரி பற்குணராஜா விசேட முன்மொழிவொன்றை முன்வைத்துள்ளார்.
புத்தசாசன அமைச்சு
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
“யாழ்ப்பாண மாநகர சபைக்குச் சொந்தமான காணியில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் தற்போது புதிய நிர்வாக கட்டமைப்புக்குள் கொண்டு செல்லப்படுகின்றது.

மாநகர சபைக்குச் சொந்தமான சொத்துகளை நிர்வகிக்கும் முழு உரிமையும் மாநகர சபைக்கே உரியது.
மத்திய அரசின் கலாசார அமைச்சும் புத்தசாசன அமைச்சும் அதன் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்த முயல்வது அதிகாரப் பரவலாக்கக் கொள்கைக்கும் உள்ளூராட்சி தன்னாட்சிக்கும் முரணானது.
இந்த நிலையத்தை பராமரிக்க மாநகர சபைக்கு போதுமான நிதி வசதி இல்லாத நிலையிலேயே “கூட்டு நிர்வாகம்” என்ற பெயரில் மத்திய அரசு தலையீடு செய்துள்ளது.
தீர்மான அதிகாரம்
மேலும், நிர்வாகக் குழுவில் மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளர் இணைக்கப்பட்டிருந்தாலும், மத்திய அரசு சார்பான உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தீர்மான அதிகாரம் கொழும்பு நிர்வாகத்தின் கீழ் செல்லும் அபாயம் உருவாகியுள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவர் சில முக்கிய பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளார்.
“காணியின் உரிமையாளராகிய மாநகர சபைக்கு நிர்வாகக் குழுவில் அதிக பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.
கலாசார நிலையம் வருமானம் ஈட்டும் சுயநிறைவு நிலையை அடைந்த பின்னர் அதன் முழுமையான நிர்வாகம் மாநகர சபைக்கு ஒப்படைக்கப்படும் வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
மாநகரத்தின் சொத்துக்கள்
நிலையத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளூர் மக்களின் கலாசார மேம்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

சொத்து எமது மாநகரத்தினுடையது. அதிகாரம் மட்டும் ஏன் அந்நியப்பட வேண்டும்? மாநகரத்தின் சொத்துகளும் அதிகாரங்களும் உள்ளூராட்சி நிர்வாகத்திடமே இருக்க வேண்டியது அவசியம்” என வலியுறுத்தியுள்ளார்.
இந்த முன்மொழிவுக்கு சபை உறுப்பினர்கள் முழுமையான ஆதரவு வழங்கி பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும், மாநகர சபையின் உரிமையை பாதுகாக்க தேவையான எந்த நடவடிக்கைக்கும் ஒத்துழைப்பதாக உறுப்பினர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |