சிறிலங்கா அரச தலைவரின் கனவுகள் கலைந்தது! வீட்டுக்கு செல்லவும் தயார் நிலையில் கோட்டாபய - வெளிவந்த செய்தி
நாட்டுக்கும் மக்களுக்கும் தவறிழைத்து ஐந்து வருடங்கள் அதிகாரத்தில் இருப்பதைவிட மக்களுக்கு தேவையானதை செய்துவிட்டு நாளையே வீட்டுக்கு செல்வதே சிறிலங்கா அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ஸவின் (Gotabaya Rajapaksa) நோக்கமென சிறிலங்கா அரச தலைவரின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர (P. B. Jayasundera) தெரிவித்தார்.
அரச தலைவரின் செயலகத்தில் நேற்று நடைபெற்ற அரச ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
சிறிலங்கா அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ, ஆட்சியைப் பொறுப்பேற்று நடைமுறைப்படுத்த தயாரான "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கையில் அடங்கிய திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தபோது கொரோனா வைரஸ் பாதிப்பு அதற்கான இலக்குகளை மாற்றிவிட்டது.
அத்தகைய சூழ்நிலையில் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதே அவசரத் திட்டமாக அமைந்துவிட்டது. கொரோனா வைரஸ் முதலாவது அலை எமக்கு புதிய அனுபவங்களை வழங்கியுள்ள அதேவேளை, அதன் பின்னரான இரண்டாவது அலை நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் பாரிய வீழ்ச்சிக் குள்ளாக்கிவிட்டது.
கொரோனா வைரஸ் முதலாவது பாதிப்புக்கு முன்னரே அதன் கட்டுப்படுத்தலுக்கான முன்னோடி நடவடிக்கையாக கொரோனா கட்டுப்பாட்டு செயலணி ஒன்றை உருவாக்கி அரச தலைவர் மற்றும் அரசாங்கம் சாத்தியமாக அதனை எதிர்கொள்ள நடவடிக்கை எடுத்தது.
அதன் பின்னரான கொரோனா வைரஸ் அலைகளை எதிர்கொண்டபோது பாரிய தடைகள், பின்னடைவுகளை சந்திக்க நேர்ந்தது.
அத்துடன் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டதுடன் அதிலிருந்து மீண்டு முன்னோக்கிச் செல்வதற்கு புதிய உபாயங்கள், வழிமுறைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. பல்வேறு குறைபாடுகள் மற்றும் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் மக்களை வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக சரியான நடவடிக்கைகளை முன்னெடுத்ததால் தற்போது தடுப்பூசி வழங்கலில் உலகின் சிறந்த 10 நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளமை நாட்டுக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்.
.உலகில் எந்த ஒரு நாட்டிலும் அரசாங்கத்தின் கருத்து ஒன்றாகவே இருக்க வேண்டும். அந்த வெளிப்பாட்டை ஒருவரே வெளிப்படுத்தவேண்டும். எனினும் இலங்கையில் பெரும்பாலோனோர் பேசுகின்றனர். அதில் குறைவாக பேசுபவர் சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸவே.
அவர் அதிகம் பேசாவிட்டாலும் அதிகமாக வேலை செய்பவர். அவர் தேவையான நேரத்தில் இலக்கை நோக்கி பயணிப்பவரென்றும் சிறிலங்கா அரச தலைவரின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.