இலங்கையில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சி - கலாநிதி சந்திம ஜீவந்தர வெளியிட்டுள்ள தகவல்
இலங்கையில் பரவி வரும் கோவிட் வைரஸ் சம்பந்தமான புதிய ஆராய்ச்சிகள் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செல் உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இலங்கையில் பரவும் கோவிட் வைரஸ் இங்கிலாந்தில் பரவி வரும் உருமாறிய வைரஸ் என கண்டறியப்பட்டது.
இந்த வைரஸே நாட்டில் வேகமாக பரவுவதற்கு காரணமாக அமைந்துள்ளதா அல்லது வேறு உருமாறிய வைரஸ் நாட்டுக்குள் பரவி வருகிறதா என்பதை கண்டறிய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் சுகாதார அமைச்சின் மூலம் கோவிட் தொற்றிய நோயாளிகளிடம் பெற்றுக்கொண்ட முடிவுகளை அனுப்பினால், அவற்றை பரிசோதனை செய்ய நிறுவனம் தயாராக இருப்பதாகவும் ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பிடித்து கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு இந்திய பிரஜைகளில் ஒருவர் கோவிட் தொற்றாளி என கண்டறியப்பட்டுள்ளது.
அவரிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை தமது நிறுவனத்திற்கு அனுப்பி வைக்குமாறு அறிவித்திருந்தாலும் அவற்றை இன்னும் அனுப்பி வைக்கவில்லை எனவும் ஜீவந்தர மேலும் தெரிவித்துள்ளார்.