இந்தியாவை போன்று நிலைமை ஏற்படும்! தீவிரத் தன்மை தொடர்பில் கடுமையான எச்சரிக்கை
இலங்கையில் நாளொன்றுக்கு 10ஆயிரம் வரையிலான பீசீஆர் மற்றும் என்டிஜன் சோதனைகளை மேற்கொள்ளாதுபோனால் இந்தியாவை போன்று கொரோனா பாதிப்பு தீவிரமடையும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதிப்பு இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று தீவிரமடையும் நிலைக்கு ஒப்பானதாக அமையும் என்று பொது சுகாதார கண்காணிப்பாளர்கள் சம்மேளனம் எச்சரித்துள்ளது.
பொது சுகாதார பரிசோதகர் சம்மேளன செயலாளர் மஹேஸ் பாலசூரிய இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கடந்த வாரங்களில் சுகாதார வழிமுறைகள் உரிய முறையில் பி;ன்பற்றப்படவில்லை. மாவட்டங்களுக்கு இடையிலான எல்லைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.
எனவே எதிர்வரும் 14 நாட்களில் இதற்கான விளைவுகளை எதிர்நோக்கவேண்டியிருக்கும் என்று பாலசூரிய தெரிவித்துள்ளார். தற்போது சுமார் 500 அளவிலான கொரோனாவுக்கான என்டிஜன் மற்றும் பீசீஆர் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனினும் இது நாளொன்றுக்கு 10ஆயிரமாக அதிகரிக்கப்படவேண்டும். அண்மைக்காலங்களில் குருநாகல், புததளம், கம்பஹா, கொழும்பு, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அதிகளவான கொரோனாத் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் பொதுமக்கள் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்று பாலசூரிய தெரிவித்துள்ளார்.