உலகத் தரப்படுத்தலில் முன்னிலையில் இலங்கை!
உலகம் முழுவதிலும் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நாடுகளில் இலங்கை முன்னிலை வகிப்பதாக ´அவ வேள்ட் இன் டேட்டா´ என்ற ´இணையத்தளம்´ சுட்டிக்காட்டியுள்ளது.
நாளாந்த தடுப்பூசியேற்றும் நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதே இதற்கான காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 56 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு முதலாவது கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
16 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 81 சதவீதம் தடுப்புமருந்து ஏற்றப்பட்டுள்ளது. இந்த அளவு கம்பஹா மாவட்டத்தில் 79 சதவீதமாகும்.
களுத்துறை மாவட்டத்தில் 77 சதவீதமாகும். செப்ரெம்பர் மாத நிறைவுப் பகுதிக்குள் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். அதன் பின்னர் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்படும்.
இதுவரை 100 இலட்சத்திற்கும் அதிகமான கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளன. மேலும் 20 மில்லியன் தடுப்பூசிகள் எதிர்வரும் சில வாரங்களில் இலங்கைக்குக் கிடைக்கவுள்ளன. நாட்டில் தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டத்திற்கு முப்படையினரின் முழுமையான ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது.