கிண்ணியாவில் அதிகரித்த கொரோனா தொற்றாளர்!
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேலும் ஒருவருக்க கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், கடந்த 31 ஆம் திகதி 17 பேரின் இரத்த மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்காக மட்டக்களப்பு கொரோனா மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தப் பரிசோதனையின் பிரகாரம் ஒரு நபருக்கு தொற்று இருப்பதாக மருத்துவ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் கிண்ணியா சுகாதாரப் பிரிவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்திருக்கின்றது என்றும் இன்று இனங்காணப்பட்டவர் கிண்ணியா குட்டிக்கராச் பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் என்றும், இவர் ஏற்கெனவே தொற்றாளராக இனங்காணப்பட்டவரின் உறவினராகும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரதேசத்தில் ஓரிரு குடும்பத்தை மையப்படுத்தி ஒரு சிறிய கொத்தணியான பரவலே காணப்படுகிறது. இந்த நிலையில் இவற்றை இலகுவாக கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பே அவசியமாகும்.
எனவே வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் கட்டாயம் 14 நாட்கள் முறையாகப் பேண வேண்டும்.
அத்தோடு பொதுமக்கள் சுகாதார அதிகாரிகளால் விடுக்கப்படுகின்ற சுகாதார அறிவுறுத்தல்களை கட்டாயம் பேண வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.