அனைத்துலக அரங்கில் பின்னிலைக்கு தள்ளப்பட்டது இலங்கை
2021ஆம் ஆண்டிற்கான ஊழல் மதிப்பாய்வு சுட்டியின் பிரகாரம், இலங்கைக்கு 37 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. முன்னைய வருடத்தை விட ஒரு புள்ளி குறைவாக வழங்கப்பட்டுள்ளது.
ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் மதிப்பாய்வு சுட்டியானது உலகெங்கிலுமுள்ள 180 நாடுகளின் பொதுத்துறை ஊழல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகின்றது.
குறித்த மதிப்பாய்வு சுட்டியில், புள்ளி வழங்கப்படும் முறையில் 0 என்பது கூடிய ஊழல் நிலையையும் 100 என்பது ஊழலற்ற தூய்மையான நிலையையும் சுட்டிக்காட்டுகின்றது.
தரவரிசையின் அடிப்படையில், 2020 ஆம் ஆண்டு 94ஆம் இடத்திலிருந்து இலங்கை, 2021ஆம் ஆண்டு 102ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இலங்கை அதிகபட்சமாக 2012ஆம் ஆண்டு 40 புள்ளிகளை பெற்றுள்ளது.
ஊழல் மதிப்பாய்வு சுட்டியில் இலஞ்சம், பொது நிதியின் தவறான பயன்பாடு, ஊழல் தொடர்பான வழக்குகளை திறம்பட விசாரணை செய்யும் தன்மை, போதுமான சட்ட கட்டமைப்புகள், முறைகேடுகளை வௌிப்படுத்துவோர், ஊடகவியலாளர்கள் மற்றும் புலனாய்வாளர்களுக்கான சட்டப் பாதுகாப்புகளின் தன்மை ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பொறுப்புக்கூறலுக்கு தேவையான அதிகாரத்தை வைத்திருப்பதற்கு தேவையான உரிமைகளை உறுதிப்படுத்தல், அதிகாரத்தின் மீதான நிறுவன கட்டுப்பாடுகளை மீட்டெடுத்து வலுப்படுத்தல் என்பவும் அதில் உள்ளடக்கபட்டுள்ளன.
எல்லை கடந்த ஊழல் வடிவங்களை எதிர்த்துப் போராடுதல், அரச செலவீனங்களில் தகவலறியும் உரிமையை உறுதிப்படுத்தல் ஆகிய விடயங்களை ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் நிறுவனம் பரிந்துரை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
