பதவி நீக்க விவகாரம்! சி.வி.கே - சுமந்திரனுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தவறான ஆட்சேபனையை தாக்கல் செய்தமைக்காக தமிழரசு கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் மற்றும் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் வழக்குச் செலவாக தலா பத்தாயிரம் ரூபாவை வழக்காளியான பொன்னம்பலம் இராசேந்திரத்துக்கு செலுத்த வேண்டுமென யாழ். மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பில் நேற்று 12.05.2026 செவ்வாய்க்கிழமை கட்டளையிட்டதோடு, குறித்த வழக்கானது தொடர்ந்து நடாத்திச் செல்ல உத்தரவிடப்பட்டது.
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகளின் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயற்பட்டதாக கூறி வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் இராசேந்திரம் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து எம்.ஏ சுமந்திரனால் கடிதம் ஒன்றின் மூலம் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மத்தியக்குழுவின் தீர்மானம்
அதனைத் தொடர்ந்து குறித்த பிரதேச சபை உறுப்பினர், சுமந்திரன் தன்னை எந்த அடிப்படையுமற்று மத்தியக்குழுவின் தீர்மானம் எதுவுமின்றி கட்சியில் இருந்து தன்னிச்சையாக நீக்கியதாக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

தொடர்ந்து குறித்த வழக்கில் தோன்றிய தமிழரசு கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் மற்றும் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் குறித்த வழக்கு தாக்கல் செய்ததே தவறு என தமது ஆட்சேபனையினை எழுத்துமூலம் தாக்கல் செய்திருந்தனர்.
இருதரப்பாலும் எழுத்துமூல சமர்ப்பணங்கள் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்றைய யதினம் (12.05.2026) செவ்வாய்க்கிழமை அழைக்கப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தால் கட்டளையொன்று ஆக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டளையில் மேற்படி தமிழரசுக் கட்சியின் தலைவராலும் செயலாளராலும் எழுப்பப்பட்ட ஆட்சேபனைகள் தவறானது எனக் கூறி தள்ளுபடி செய்யப்பட்டதுடன், குறித்த வழக்கானது தொடர்ந்து நடாத்திச் செல்ல உத்தரவிடப்பட்டதுடன், மேலதிகமாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் தலா பத்தாயிரம் ரூபாயை குறித்த ஆட்சேபனையை எழுப்பியதற்கான வழக்குச் செலவாக வழக்காளியான பொன்னம்பலம் ராசேந்திரத்துக்கு செலுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து குறித்த வழக்கானது 07.07.2026 அன்று தவணையிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |