யாழில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தக நிலையம் : நீதிமன்றின் அதிரடி உத்தரவு
யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தக நிலையத்தின் வியாபார அனுமதியை இரத்து செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றம் நேற்று (18) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்தில் காலாவதியான சொக்லேட், பால் போத்தல் உள்ளிட்ட மூன்று வகையான பொருட்கள் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த நிலையில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களின் பரிசோதனையின்போது கண்டறியப்பட்டது.
வழக்குத் தாக்கல்
இதனையடுத்து குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு நேற்று (18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த வர்த்தக நிலையம் இதேபோன்ற குற்றச்செயலில் முன்னரும் ஈடுபட்டிருந்தமை தொடர்பான முற்குற்றம் ஒன்றும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இந்தநிலையில் வழக்கை ஆராய்ந்த யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதி உசைன், குற்றத்திற்காக 7,500 ரூபாய் தண்டம் விதித்ததுடன், குறித்த நிறுவனத்தின் வியாபார அனுமதியை இரத்து செய்யுமாறு உரிய பிரதேச சபைக்கு நீதிமன்ற பதிவாளர் ஊடாக அறிவித்தல் அனுப்புமாறும் உத்தரவிட்டார்.
நீதிமன்றம் உத்தரவு
மேலும், குறித்த தண்டனை விபரங்கள், எதிரியின் பெயர், நிறுவனத்தின் பெயர் மற்றும் குற்றம் தொடர்பான விபரங்களை இலங்கையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாகும் பத்திரிகைகளில் பகிரங்கப்படுத்துமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

அத்துடன் அதற்கான அனைத்து செலவினங்களையும் எதிர்த்தரப்பினர் ஏற்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களின் சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைப்பது தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதற்கான முக்கிய முன்னுதாரணமாக இந்த நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |