புத்தாண்டு சேவை! இலங்கை போக்குவரத்துச் சபை ஈட்டிய பில்லியன் வருவாய்
புத்தாண்டு சேவைகளை வழங்கியதன் மூலம் 6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபைத் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன தெரிவித்துள்ளார்.
புத்தாண்டுக்காக தங்கள் கிராமங்களுக்கு சென்ற மக்களுக்குச் சேவைகளை வழங்கியதன் மூலம் இந்த வருவாய் ஈட்டப்பட்டதாக, இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றில் அதிகபட்ச வருவாய்
அதன்படி, வரலாற்றில் அதிகபட்ச வருவாய் ஈட்டப்பட்ட நாளாக 11ஆம் திகதி பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அந்தத் தொகை 213 மில்லியன் ரூபாய் என்றும் சஜீவ கூறியுள்ளார்.

இதற்கிடையில், புத்தாண்டின் போது தங்கள் கிராமங்களுக்குச் சென்றிருந்த மக்களை கொழும்பு மற்றும் முக்கிய நகரங்களுக்குத் திரும்ப அழைத்து வர, இன்று முதல் சிறப்புப் பேருந்து சேவைகள் இயக்கப்படும் என்று தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை, புத்தாண்டுக்காக கொழும்பிலிருந்து தங்கள் கிராமங்களுக்கு 400,000க்கும் மேற்பட்ட பயணிகள் தனியார் பேருந்துகளைப் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முறைப்பாடுகள்
இந்த நிலையில், பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற தொலைபேசி எண் வழியாக முறைப்பாடு அளிக்கலாம் என கூறப்படுகிறது.

இதற்கிடையில், இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, தங்கள் கிராமங்களுக்குச் சென்ற மக்களுக்குப் போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக 4,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறிள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |