றம்புக்கனையில் ஊரடங்கு சட்டம் தளர்வு!!
றம்புக்கனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நடைமுறையில் இருந்த காவல்துறை ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் 12 மணித்தியாலங்களுக்கு மேலாக ரம்புக்கனை தொடருந்து கடவையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்துள்ளனர்.
இருப்பினும், அவர்கள் கலைந்து செல்லாமல் முச்சக்கர வண்டிக்கு குழுவொன்று தீ வைத்ததாகவும், எரிபொருள் தாங்கி ஊர்திக்கு தீ வைக்க முற்பட்ட போது குழுவினரை கலைக்கும் முயற்சியாக காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தில் ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த குருவிட்டகே டொன் சமிந்த லக்ஷான் என்ற நபர் உயிரிழந்தார். போராட்டத்தின் போதான மோதலில் காயமடைந்த காவல்துறை அதிகாரிகள் உட்பட 27 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன்காரணமாக அங்கு ஏற்ப்பட்ட குழப்பநிலையை கருத்திற் கொண்டு றம்புக்கனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இருப்பினும், இன்று அதிகாலை அதிகாலை 5 மணி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
றம்புக்கனை சம்பவம் தொடர்பில் காவல்துறைமா அதிபரின் பணிப்புரையின் பேரில் விசாரணை நடத்துவதற்கு சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட 20 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது
