வடக்கில் 36 குளங்கள் வான் பாயும் நிலையில்
வடக்கு மாகாணத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட 36 குளங்கள் வான் பாயும் நிலையை அடைந்துள்ளதுடன், சில குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி த.இராஜகோபு தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை (28) காலை 9.00 மணியளவில் வெளியிடப்பட்ட நிலவர அறிக்கையின் முக்கிய விவரங்கள் வருமாறு:
மாங்குளம் மற்றும் வவுனியா பகுதிகளில் சடுதியான அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இன்று காலை 9.00 மணி வரையிலான 24 மணித்தியாலத் தரவுகளின்படி:
மாங்குளம்: 378.5 மி.மீ,
முத்துஐயன்கட்டு: 342 மி.மீ,
வவுனியா: 340 மி.மீ,
சேமமடு: 135 மி.மீ இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26'-10' அடியை எட்டியுள்ளது.
குளத்துக்கு வரும் நீரின் அளவு சடுதியாக அதிகரித்து வருவதால், குளத்துக்கு ஏற்படக்கூடிய அபாயத்தைத் தவிர்க்கவும், கீழ்ப்பகுதி வெள்ள அனர்த்தத்தைத் தவிர்க்கவும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இன்று காலை 6.00 மணி முதல் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
தற்போது மணித்தியாலத்துக்கு 6.281 மில்லியன் கன மீற்றர் நீர் குளத்துக்குள் வருகின்றது. இதன்படி நீர்மட்டம் 28'-6' அடியை அடைந்தால் எஞ்சிய 6 கதவுகளும் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
அதிக மழைவீழ்ச்சி காரணமாக வவுனியா மாவட்டத்திலுள்ள சில குளங்கள் உடைப்பெடுக்கும் நிலையை அடைந்துள்ளன.
பம்பைமடு குளம்: 34 அங்குல மேலதிக நீர் வான் பாய்ந்ததால், குளம் உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அணையைப் பாதுகாக்கவும் ஆபத்தைக் குறைக்கவும் வான் வழிவாய்க்காலுக்கான தடுப்பணையின் ஒரு பகுதி நேற்று வெட்டிவிடப்பட்டதாக கூறப்படுகி
கனகராயன்குளம் மற்றும் அலியாமருதமடு: இக்குளங்களும் உடைப்பெடுக்கும் அபாயத்தில் உள்ளதால், அவற்றின் வால்கட்டுப் பகுதிகள் மற்றும் அணைகளை வெட்டி நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனிக்குளம் (27'-10') மற்றும் தேறாங்கண்டல் குளம் என்பன வான் பாய்கின்றன. முத்துஐயன்கட்டு குளத்தின் நீர்மட்டம் 23'-00' (92மூ) ஆக உள்ள நிலையில் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
மொத்தமாக 54 நடுத்தர மற்றும் பாரிய குளங்களில் 36 குளங்கள் வான் பாய்கின்றன.
தண்ணிமுறிப்பு, மடவாளசிங்கம், மருதமடு, கனுக்கேணி ஆகிய குளங்களுக்கு உத்தியோகத்தர்கள் சென்றுள்ள போதிலும், தொலைத்தொடர்பு வலையமைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் தொடர்புகளைப் பேண முடியவில்லை எனப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |