அபாயகரமான சிறிலங்காவின் முயற்சி - அரசியல் பதற்றம் ஏற்படும் என எச்சரிக்கை
உலகில் மிகப்பெரிய இரண்டு நாடுகளை பரஸ்பரம் ஏமாற்றி, அவர்களிடம் இருந்து அதிகபட்ச இலாபத்தை அடைவதற்கு ஸ்ரீலங்கா மேற்கொள்ளும் முயற்சியானது அபாயகரமானது என ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன்(CV Vigneswaran) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் இறுதியில் சங்கடமான நிலைமையே ஏற்படும் என எச்சரித்துள்ளார்.
பூகோள அரசியல் அதிகாரப் போட்டிக்குள் ஸ்ரீலங்கா தற்போது சிக்கியுள்ளது.தேவையற்ற வகையிலும் துரதிஷ்டவமாகவும் இந்த அரசாங்கம் பூகோள அரசியல் பதற்றத்திற்கு வழியேற்படுத்தியுள்ளது. இதனை தவிர்த்திருக்கலாம். தற்போது உள்ளவர்களே முன்னரும் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டிருந்தனர். கணிசமான அழுத்தங்கள் மற்றும் செல்வாக்குகளை பிரயோகிக்கும் வெளிநாட்டு சக்திகளிடம் இருந்து அவர்களால் தற்போது வெளிவர முடியாமல் தவிக்கின்றனர்.
இரண்டு மிகப் பெரிய நாடுகளின் பூகோள அரசியல் பிரச்சினைகளின் விளைவுகளை எதிர்நோக்கும் இடமாக இலங்கை தற்போது மாறியுள்ளது.ஆகவே நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இந்த அரசாங்கம் பரஸ்பரம் ஒருவருக்கு எதிராக மற்றுமொருவருக்கு உதவி வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றது. எனினும் அது நாட்டிற்கு சிறந்ததாக அமையாது. அது மிகவும் அபாயரகமானது.
மது நாடு ஏற்கனவே நிதி ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது. சீனா இன்று சில ரில்லியன் ரூபாவை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக அறிய முடிகின்றது.இந்தியாவும் சில உதவிகளை வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. ஒருவருக்கு எதிராக மற்றுமொருக்கு ஆதரவு வழங்கி, மேற்கொள்ளும் விளையாட்டின் மூலம் அதியுச்ச இலாபத்தை பெற மேற்கொள்ளும் முயற்சியானது இறுதியில் சங்கடமான நிலைமைக்கே வித்திடும்.
இந்தியாவுடன் நெருக்கமான வரலாற்று தொடர்பை கொண்டிருப்பதாலேயே சீனாவின் பிரசன்னத்தை வடக்கு மக்கள் விரும்பவில்லை என குறிப்பிட்ட அவர், அது சீனாவை காயப்படுத்தும் நோக்கம் கொண்டதல்ல என தெரிவித்துள்ளார். தெற்கில் சீனாவிற்கு போதுமான ஒத்துழைப்புக்களை அரசாங்கம் வழங்காத காரணத்தால் அவர்கள் வடக்கு நோக்கி திசை திரும்பியிருக்கலாம்.
ஆகவே தான் அவர்கள் வடக்கில் உள்ள தமிழ் மக்களுடன் நெருக்கமாக முயற்சிக்கின்றனர்.இது அனைத்தும் தேவையற்றது. விரும்பத்தகாத அல்லது ஆபத்தான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு மிகப் பெரிய நாட்டினால் பயன்படுத்தப்படும் ஒரு இடமாக இருப்பதானது, சிறிய நாட்டின் நலன்களுக்கு ஏற்புடையதல்ல.
எனினும் அதுவே தற்போது இலங்கையில் நடைபெற்றுவருகின்றது.இவை அனைத்தும் மிகவும் ஆபத்தானது. இந்தியாவுடன் கலாசாரம் மற்றும் சமயம் உள்ளிட்ட விடயங்களில் நெருக்கமாக இருக்கும் தமிழர்களுக்கும் இது கரிசனை அளிக்கும் ஒன்றாக காணப்படுகின்றது.
கடற்றொழிலாளர்களும் இந்திய கடற்றொழிலாளர்களை திருமணம் செய்யும் அளவிற்கு உறவுகள் காணப்படுகின்றன. ஆகவே தமிழ் நாட்டிற்கும் இலங்கை தமிழர்களுக்கும் இடையில் நெருக்கமான உறவு காணப்படுகின்றது.இவ்வாறான ஒரு நிலையில் சீனாவின் வடபகுதி பிரசன்னம் தேவையற்ற ஒன்று என்றே தமிழ் மக்கள் கருதுகின்றனர்.
சீனாவை காயப்படுத்தும் எண்ணம் தமிழ் மக்களுக்கு இல்லை. எனினும் தமிழ் மக்கள் சீனாவின் பிரசன்னம் தேவையற்றது என்றே கருதுகின்றனர்.எதிர்காலத்தில் அரசாங்கமானது எவ்வாறான தீர்மானத்தை மேற்கொள்கின்றது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். சீனாவின் வடபகுதி பிரசன்னமானது, ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் சங்கடமான நிலைமையையும் மக்களுக்கு நெருக்கடியையும் எதிர்வரும் மாதங்களில் உருவாக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.