ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர கைது சம்பவம் - முல்லைத்தீவு ஊடக அமையம் கண்டனம்
தொடரும் ஊடக அடக்குமுறையின் மற்றுமொரு வடிவமே ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர கைது சம்பவம் என்பதனையும் குறித்த காட்டுமிராண்டித்தனமான கைது நடவடிக்கைக்கு கடுமையான கட்டணங்களை உள்ளடக்கிய ஊடக அறிக்கையொன்றை முல்லைத்தீவு ஊடக அமையம் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற தரப்புக்கள் ஊடகங்களை அடக்கியாள நினைப்பது வழமையான தொடர்கதையாகவே இருந்து வருவதாக இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள் மீதான தொடர் அடக்குமுறை

இவ்வறிக்கையின் படி,
“யுத்த காலத்தில் குறிப்பாக 2009 ம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வரும் வரை ஆட்சியாளர்களால் அடக்குமுறைகளால் வன்முறைகளால் எமது 39 தமிழ் ஊடகவியலாளர்களையும் ஊடகப்பணியாளர்களதும் இன்னுயிர்களை இழந்தும், காணாமல் ஆக்கப்பட்டும், பறிகொடுத்தும் நீதி கோரி போராடிவருகின்ற தரப்பாக இன்றும் எமது ஊடகவியலாளர்கள் இருக்கின்றார்கள்.
இவ்வாறான பின்னணியில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழ் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து கட்டமைக்கப்பட்ட வன்முறைகள் அடக்குமுறைகள் தற்போது, தென்பகுதி சிங்கள சகோதர ஊடகவியலாளர்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
இதன் உச்சக்கட்டம் தலைநகர் கொழும்பில் அரசுக்கெதிராக முன்னெடுக்கப்பட்ட அறகலய போராட்டத்தில் அரங்கேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து தொடர்ச்சியாக வடகிழக்கு தமிழ் ஊடகவியலாளர்கள் மீதும் தென்பகுதியில் சிங்கள சகோதர ஊடகவியலாளர்கள் மீதும் தொடர்ந்து வருகிறது.
இதன் ஒரு வடிவமாகவே ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர காவல்துறையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம்.
குறித்த சம்பவத்தையும் தொடர்ச்சியாக நியாயப்படுத்துவது போல நியாயப்படுத்த முடியாதென்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
கைது நடவடிக்கை

இலங்கை இளம் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் சுயாதீன ஊடகவியலாளருமான தரிந்து உடுவரகெதர வெள்ளிக்கிழமை (28.07.2023) தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த போராட்டத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது, பொரளையில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டே ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர கைதுசெய்யப்பட்டதுடன், இது தற்செயலாக நடந்த சம்பவமாக நாம் பார்க்கவில்லை.
திட்டமிட்ட வகையில் தாக்கப்பட்டு காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
தொடர்ச்சியாக ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர, தமது பணிகளை முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினரும் அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்களும் தடைகளை ஏற்படுத்துவதன் ஊடாக இலங்கையின் ஊடகச்சுந்திரம் தொடர்ந்தும் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது.
காவல்துறையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்ட ஊடகவியலாளரை பல மணி நேரங்களுக்குப் பின்னரே அவர்கள், சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தியுள்ளதாக அறிகின்றோம்.
அடிப்படை உரிமை மீறல்

சட்ட வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய ஊடகவியலாளரை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தரிந்துவின் இரு கைககளும் கைவிலங்கிடப்பட்ட நிலையில் காணப்பட்டது.
ஊடகவியலாளர் ஒருவரை தாக்கியது மட்டுமல்லாது அவரது அடிப்படை உரிமைகளையும் மீறி, படுமோசமான முறையில் அவரை நடத்தும் இலங்கைப் கால்துறையினரின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.