ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவின் கைது நடவடிக்கைக்கு யாழ் ஊடக அமையம் கண்டனம்
ஊடக அடக்குமுறையினை கட்டவிழ்த்து கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென யாழ் ஊடக அமையம் கோரியுள்ளது.
இலங்கை இளம் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், சுயாதீன ஊடகவியலாளருமான தரிந்து உடுவரகெதர நேற்றைய தினம்(28) வெள்ளிக்கிழமை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த போராட்டத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது, பொரளையில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
குறித்த கைது நடவடிக்கையை கண்டித்து , யாழ் ஊடக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேள்விக்குள்ளாகும் ஊடக சுதந்திரம்

அவ்வறிக்கையின்படி,
“இலங்கையில் மாறி மாறி ஆட்சிபீடத்திலிருக்கின்ற தரப்புக்கள் ஊடகங்களை அடக்கியாள நினைப்பது வழமையான தொடர்கதையாகவே இருந்து வருகிறது.
அத்தகைய ஊடக அடக்குமுறைகளால் 39 தமிழ் ஊடகவியலாளர்களையும், ஊடகப்பணியாளர்களதும் இன்னுயிர்களை இழந்தும், காணாமல் பறிகொடுத்தும் நீதி கோரி போராடி வருகின்ற யாழ் ஊடக அமையம் இந்த கைது நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கின்றது.
ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர காவல்துறையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டதை நியாயப்படுத்த முடியாதென்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
தமது பணிகளை முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினரும் அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்களும் தடைகளை ஏற்படுத்துவதன் ஊடாக இலங்கையின் ஊடகச்சுந்திரம் தொடர்ந்தும் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது.
காவல்துறையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்ட ஊடகவியலாளரை பல மணி நேரங்களுக்குப் பின்னரே காவல்துறையினர் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தியுள்ளதாக அறிகின்றோம்.
சட்ட வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய ஊடகவியலாளரை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தரிந்துவின் இரு கைககளும் கைவிலங்கிடப்பட்ட நிலையில் உள்ளது.
ஊடகவியலாளர் ஒருவரை தாக்கியது மட்டுமல்லாது அவரது அடிப்படை உரிமைகளையும் மீறி, படுமோசமான முறையில் அவரை நடத்தும் இலங்கைப் காவல்துறையின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஏற்கனவே படுகொலையான காணாமல் ஆக்கப்பட்ட எமது நண்பர்களிற்காக நீதி கேட்டு சர்வதேசத்தின் கதவை தட்டிவருகின்ற நாம் இவ்வேளையில் எமது சக இன ஊடக நண்பர்களுடன் இன மத மொழி வேறுபாடுகளை தாண்டி ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி கைகோர்த்துக் கொள்கிறோம்”என குறிப்பிடப்பட்டுள்ளது.