தொழில் நிமித்தம் யாழ்ப்பாணம் வந்தவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - காரைநகர், கசூரினா கடலில் நீராடியவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
குருநாகல் குளியாப்பிட்டியவைச் சேர்ந்த அன்ரன் ஜேக்கப் ( வயது - 57 ) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவரென ஊர்காவற்துறை காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவர் தொழில் நிமித்தம் குளியாப்பிட்டி பகுதியிலிருந்து மண்டைதீவு பகுதிக்கு வந்து, தங்கி நின்று மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த முதியவர் நேற்றைய தினம் சனிக்கிழமை சிலருடன் இணைந்து கசூரினா கடற்கரைக்கு சென்று கடலில் நீராடியுள்ளார்.
அதன் போது அலையில் சிக்கி நீரில் மூழ்கிய நிலையில் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போது, ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
