துமிந்தவின் விடுதலை எதிரொலி - தம்மையும் விடுவிக்குமாறு கைதிகள் போராட்டத்தில் குதிப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டதை அடுத்து, மரண தண்டனை விதிக்கப்பட்ட மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளிலுள்ள மரண தண்டனை கைதிகள் இன்று பிற்பகல் முதல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு அளித்ததுபோல தங்களையும் விடுதலை செய்யுமாறு கோரியே அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமன்னிப்பு இல்லாவிட்டால் தங்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கும்படி அவர்கள் கோரிவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கைதிகளின் உண்ணாவிரதத்தை உறுதிப்படுத்திய சிறைச்சாலை செய்தித் தொடர்பாளர் சந்தன ஏகநாயக்க, தமது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கைதிகள் கோருகின்றனர் எனத் தெரிவித்தார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று நீதி அமைச்சகத்துடன் கலந்துரையாடல் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.