வவுனியாவில் வனவள திணைக்களத்தின் ஆதரவுடன் பெருமளவு காடுகள் அழிப்பு…! சத்தியலிங்கம் எம்.பி குற்றச்சாட்டு
வவுனியா பல்கலைக்கழகம் முன்பாக வனவள திணைக்களத்தின் ஆதரவுடன் பெருமளவான காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (20) இடம்பெற்ற மத்திய வங்கியின் 2025ம் ஆண்டின் பொருளாதார செயற்றிறன் தொடர்பான அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு தெரிவித்ததாவது, வவுனியா பல்கலைக்கழகம் முன்பாக உள்ள ஒதுக்குக்காடு சுமார் 40 ஏக்கர் வரையில் தற்போது அழிக்கப்படுகிறது. இவ்விடயத்தில் வனவள திணைக்களத்திற்கும் தொடர்புள்ளது.
வனவளத் திணைக்களம்
காடழிப்பு நடைபெறும் இடத்திலிருந்து 1.5 கிலோ மீற்றர் தூரத்திற்குள் வனவள திணைக்களத்தின் அலுவலகம் உள்ளது. இருப்பினும் காட்டு மரங்கள் வெட்டப்பட்டு ஏற்றிசெல்லப்பட்டுள்ளன.

வவுனியா வடக்கில் திரிவைத்தகுளம் காடு சிங்கள மக்களால் வெட்டப்பட்ட போது இதே வனவளத் திணைக்களம் கண்டும் காணாமல் இருந்தது. அதேவேளை தமது வயல் நிலத்தை துப்பரவு செய்யும்போது தமிழ் விவசாயிகள் கைது செய்யப்பட்டார்கள்.
திரிவைத்தகுள விவசாயிகளுக்கு எதிராக 2019ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 2025வரை மேற்படி காணிகள் தமது ஆழுகைக்கு உட்பட்ட வனமென வழக்கை நடாத்தி நீதிமன்றத்தை தவறாக வழிநடாத்திய வனவள திணைக்களம் 2021இலேயே அந்த காட்டை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்கு விடுவித்துள்ளார்கள்.
ஆனால் விவசாயிகளை தண்டிப்பதற்காக அந்த தினைக்களத்துடன் தொடர்பில்லாத இடத்திற்காக வழக்கை நடத்தியுள்ளனர்” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



