“ராஜ்கிரணை கொன்ற இலங்கை அரசு மீது தகுந்த நடவடிக்கை எடு” கொதித்தெழுந்த மீனவர்கள்
இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் நடுக்கடலில் படகு மூழ்கி மீனவர் உயிரிழந்ததை கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இந்திய மீனவர் ராஜ்கிரணை கொன்ற இலங்கை அரசு மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,
கொல்லப்பட்ட இந்திய மீனவர் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக ஒரு கோடி வழங்க வேண்டும்,
இந்திய - இலங்கை மீனவர் நல்லிணக்க பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தி மீனவர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இன்று காரலை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடத்தில் மீனவர்களால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மேலும், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்கள் இலங்கை அரசுக்கும் மத்திய அரசுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினதிலிருந்து கடந்த 18ஆம் திகதி சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மூன்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இவர்கள் 18ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்த பகுதில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்களை கைது செய்ய முற்பட்டதாக கூறப்படுகிறது.
கைது நடவடிக்கைக்கு பயந்து மீனவர்கள் இந்திய கடற்பரப்பிற்குள் வர முயற்சித்த போது இலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் மீனவர்கள் படகு மீது மோதியதில் மீன்பிடிப் படகு நடுக்கடலில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது.
இதில் படகில் இருந்த 3 மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்தனர்.பின்னர் சுகந்தன், சேவியர் ஆகிய இரண்டு மீனவர்களை உயிருடன் மீட்ட இலங்கை கடற்படையினர் மாயமான மீனவர் ராஜ்கிரணை தொடர்ந்து தேடி வந்த நிலையில் நெடுந்தீவு அருகே காரைநகர் கடற்பரப்பில் அவரது சடலம் மீட்கப்பட்டது.
பிறகு, காங்கேசன்துறை கடற்படை முகாம் மூலம் எடுத்து வரப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.
அரசாங்க நடவடிக்கைக்குப் பின்னர் உடற்கூராய்வு அறிக்கையுடன் உடல் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.
பிறகு, கடல் வழியாக இந்தியா கொண்டு வர ஏற்பாடு நடைபெற்று வருகிறது.