கோட்டாபயவின் முயற்சிகள் அனைத்தும் படு தோல்வியில் - பதவிகோரி ரணிலிடம் சரணடைந்தாரா!
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அமெரிக்காவுக்கான நுழைவு விசா மறுக்கப்பட்டுள்ள நிலையிலும், அவர், அங்கு சென்று விடவேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக பல மாதங்களாக பல்வேறு முயற்சிகள் எடுத்தும் அவை வெற்றியளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு முயற்சிகள் தோல்வியடைந்ததையடுத்து, ஐ.நாவுக்கான சிறிலங்கா வதிவிடப் பிரதிநிதியாகவோ அல்லது அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவராகவோ செல்வதற்கான விருப்பத்தை தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரணிலிடம் கோட்டாபய கோரிக்கை
இருப்பினும், அதற்கு ரணிலிடம் இருந்து எந்தப் பதிலும் இதுவரை கிடைக்கவில்லை எனவும், அதையடுத்து சுற்றுலா நுழைவு விசா பெற்றாவது அமெரிக்கா செல்வதென்று முடிவெடுத்து அதற்கும் விண்ணப்பித்துள்ளார்.
சுற்றுலா விசாவும் தாமதிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலைமையால் கடும் மன அழுத்தத்தில் இருக்கும் கோட்டாபயவை ஆறுதல்ப்படுத்தும் முயற்சியில் அமெரிக்காவில் இருக்கும் அவரது மகன் ஈடுபட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே கோட்டாபயவுக்கு நுழைவு விசா கிடைக்கும் வரையில் அவர்கள் சிறிலங்கா வந்து கோட்டாபயவுடன் தங்கியிருப்பதற்கு முடிவெடுத்துள்ளனர் என்றும் தென்னிலங்கை வட்டாரத்திலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.