நீதிமன்றத்தில் இன்று சரணடைவாரா தேசபந்து தென்னகோன் !
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) நீதிமன்றத்தில் சரணடைவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, தேசபந்து தென்னகோன் இன்று (06) நீதிமன்றத்தில் சரணடையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெலிகம, பெலேன பகுதியில் உள்ள உணவகமொன்றுக்கு அருகில் 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக முன்னாள் ஐ.ஜீ.பி தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு பேரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
கைது நடவடிக்கை
இதடிப்படையில், தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில், அவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் கொழும்பில் உள்ள வீடு உட்பட நான்கு வீடுகள் அண்மையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலும், அவர் குறித்த வீடுகள் எவற்றிலும் இருக்கவில்லை.
இவ்வாறான நிலையில், மாத்தறை நீதவான் நீதிமன்றம் அவர் வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்கும் வகையிலான பயணத்தடையையும் விதித்துள்ள அடிப்படையில், இன்று அவர் தனது சட்டத்தரணிகளுடன் சரணடையலாமென தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
