தமிழர் பகுதியில் தந்தை செல்வாவின் சிலை மீது தாக்குதல் : ஒருவர் அதிரடியாக கைது
மன்னாரில் (Mannar)அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் நகர மத்தியில் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் சிலையே இன்று (25) அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை முக்கியஸ்தர்கள் காலை மன்னார் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலதிக விசாரணை
தந்தை செல்வாவின் உருவச் சிலையில் காணப்பட்ட தலை முழுமையாக அகற்றப்பட்ட நிலையில் சிலைக்கு அருகில் இருந்து உடைக்கப்பட்ட தலைப்பாகம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை அறிந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan), இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஆகியோர் சம்பவ இடத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.
விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் காவல்துறையினர் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





