பொது துறைகளில் அறிமுகமாகும் புதிய நடைமுறை - தொழிநுட்ப அமைச்சின் விசேட அறிவித்தல்
அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் பணம் செலுத்துதல் மற்றும் சேகரிப்பு செய்வதற்கு இலத்திரனியல் கொடுப்பனவு முறையை கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் அமைச்சின் அதிகாரிகளுக்கு இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.
தொழில்நுட்ப அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இலத்திரனியல் கட்டண வசதி

மேலும் கருத்து தெரிவித்த அவர்,
''பொதுமக்கள் அரச நிறுவனங்களுக்குச் சென்று இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் மூலம் பணம் செலுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகள் பல அரச நிறுவனங்களில் இல்லை என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் குறித்த திட்டத்தை தொழில்நுட்ப அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்காலத்தில் பொதுத்துறையில் அனைத்து கொடுப்பனவுகள் மற்றும் சேகரிப்புகளுக்கு இலத்திரனியல் கட்டண வசதியை வழங்குவது கட்டாயமாக்கப்படும்.''என தெரிவித்திருந்தார்.
தொழிநுட்ப வழிகாட்டல்

தொழில்நுட்ப அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) ஜானக சம்பத் கீகியானகே கூறுகையில்,
''எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் தேவையான தொழிநுட்ப வழிகாட்டல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நிதி அமைச்சு, தொழிநுட்ப அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு உள்ளிட்ட முக்கிய அரச நிறுவனங்களின் தலைவர்கள் அடங்கிய குழுவொன்று இதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தேவையான தொழில்நுட்ப வழிகாட்டல்களை தயாரித்து, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.'' என தெரிவித்தார்.