காணாமல் ஆக்கப்பட்ட லலித், குகனின் வழக்குகள் சிஐடிக்கு மாற்றம்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு இறுதியாக 2014 ஆம் ஆண்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) இன்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
குறித்த வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும், அச்சுவேலி காவல் நிலையப் பொறுப்பதிகாரி 17 சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்திற்கு வழக்குத் தொடர்பான உண்மைகளைப் பதிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
காவல்துறைமா அதிபர் விசாரணை
வழக்கின் முன்னேற்றம் குறித்து கடந்த ஜூன் மாதம் 3ஆம் திகதி அன்று பதில் காவல்துறைமா அதிபர் அச்சுவேலி காவல்துறை மற்றும் யாழ்ப்பாணப் பிரிவு குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டார்.
அதன்படி, வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டதாக விஜேபால குறிப்பிட்டார்.
குறித்த விசாரணையை இனிமேல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு கையாளும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
பதிலளித்த அமைச்சர் விஜேபால
ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் விஜேபால இவ்வாறு பதிலளித்தார்.
போருக்குப் பின் காணாமல் போனவர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் வழக்கு குறித்தும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போருக்குப் பின்னரான காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்தும் இந்திக இதன்போது எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
