யாழ். பல்கலையில் துறைத்தலைவர் உள்ளிட்ட மூவர் பணியிடை நீக்கம்
பரீட்சை கடமைகளில் இருந்து தவறிய குற்றச்சாட்டுக்காக விசாரணைகள் முடிவடையும் வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துறைத்தலைவர், விரிவுரையாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆகிய மூவரையும் பல்கலைக்கழக பேரவை பணி இடை நீக்கம் செய்துள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்றையதினம் சனிக்கிழமை இடம்பெற்ற பேரவைக் கூட்டத்தின் போதே குறித்த மூவரையும் விசாரணைகள் முடிவடையும் வரை பணி இடை நீக்கம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
கடந்த மாதம் கலைப்பீட மாணவர்களின் ஒரு துறைக்கான பரீட்சைக்கு வினாத்தாளை தயார் செய்யாத காரணத்தால், பரீட்சைக்கு தோற்றத் தயாராக நிலையில் வந்த மாணவர்கள், பரீட்சைக்கு தோற்ற முடியாத நிலையில் திரும்பிச் சென்று இருந்தனர்.
மூதவையின் பரிந்துரை
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், பல்கலை கழக மூதவையினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, மூதவையின் பரிந்துரையின் அடிப்படையில் பேரவை அது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு முறையான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக மூவரையும் விசாரணைகள் முடிவடையும் வரையில் பணி இடை நீக்கம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
அதேவேளை , மாணவர்களுக்கான வினாத்தாளினை தயார் செய்யாது, துறைத் தலைவர் விரிவுரையாளரையும் , விரிவுரையாளர் துறைத் தலைவரையும் மாறி மாறி கை காட்டியுள்ளனர். அதானால் இறுதி வரை வினாத்தாள் தயார் செய்யப்படவில்லை.
கடமை தவறிய குற்றச்சாட்டு
பரீட்சை வினாத்தாள் தயார் செய்யாது, பரீட்சை கடமையில் இருந்து தவறியதாக துறைத்தலைவர் மற்றும் விரிவுரையாளர் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான வினாத்தாள் தயார் செய்யப்படாமை, பரீட்சை நடைபெறாமை ஆகியவை தொடர்பில் நிர்வாக அதிகாரி உரிய தரப்புகளுக்கு உரிய முறையில் அறிவிக்கவில்லை என குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.