ரஷ்யாவிற்கு உளவு பார்த்த உக்ரைன் உளவுத்துறை உயர் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை!
உக்ரைன் பாதுகாப்புப் படையின் பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் முன்னாள் தலைமை அதிகாரியான கர்னல் டிமிட்ரோ கோஸ்யுராவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் எஃப்.எஸ்.பி பாதுகாப்பு அமைப்பிற்கு உளவு பார்த்த குற்றத்திற்காக அவர் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார்.
உக்ரைன் இராணுவத்தின் நடமாட்டங்கள், உக்ரைன் தலைவர்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் முக்கிய கட்டமைப்பு விவரங்கள் போன்ற பாதுகாப்பு இரகசியங்களை ரஷ்யாவிற்குப் பணத்திற்காக விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் கீவ் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றம் இவருக்கு இந்த அதியுச்ச தண்டனையை விதித்துள்ளது.
இராணுவச் சின்னம்
உக்ரைன் அரசுத் தலைமை வழக்கறிஞர் ருஸ்லான் கிராவ்சென்கோ இதுகுறித்துக் கூறுகையில் உக்ரைன் இராணுவச் சின்னத்தை அணிந்துகொண்டு ரஷ்யாவிற்கு உளவு பார்ப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் நாட்டின் எதிரியாகவே கருதப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு இத்தகைய கடுமையான தண்டனையே பொருத்தமானது என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டில் வியன்னா நகரில் வைத்து ரஷ்ய உளவு அமைப்பால் பணியமர்த்தப்பட்ட கோஸ்யுரா, 2024 டிசம்பருக்குப் பிறகு தீவிரமாகச் செயல்படத் தொடங்கியுள்ளார்.

உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களின் பாதிப்புகள், பலியானவர்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களை அவர் தொடர்ந்து ரஷ்யாவிற்கு அனுப்பி வந்துள்ளார்.
எலி எனப் பெயரிடப்பட்ட உக்ரைன் உளவுத்துறையின் இரகசிய நடவடிக்கையின் மூலம் கீவ் நகரில் உள்ள ஒரு பதுங்கு மாளிகையிலிருந்து தனி உறைவிடம் மற்றும் தனி வைஃபை (Wi-Fi) வசதியைப் பயன்படுத்தி அவர் ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
எனினும் அவரைக் கைது செய்வதற்கு முன்னதாகவே உக்ரைன் உளவுத்துறை அவரது கணினிகள் மற்றும் அலைபேசிகளைக் கண்காணித்து, அதன் மூலம் ரஷ்யாவிற்குப் பல தவறான உளவுத் தகவல்களை அனுப்பி ஏமாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 1 நாள் முன்