வடக்கு கிழக்கே உங்கள் நாடென சொல்கின்றனரா பேரினவாதிகள்?
கடந்த சில மாதங்களின் முன்னர் சிறிலங்கா தேசமே பொருளாதார நெருக்கடியால் பெரும் அல்லல் பட்டுக் கொண்டிருந்தது. வரலாறு காணாத பொருள் விலையேற்றம், வரலாறு காணாத பொருள் தட்டுப்பாடு, பண மதிப்பு வீழ்ச்சி என சிறிலங்காவின் கழுத்தை நெருக்கடி திருகியது. மக்கள் அனைவரும் வீதிகளில் வரிசையாக நின்று பெரும் அவலத்தை சந்தித்தார்கள்.
அப்போது சிங்களப் பேரினவாத அரசியல் பேசுகின்றவர்களும் மௌனிகளாக இருந்தார்கள். அவர்களால் எந்த வழியையும் சொல்ல முடியவில்லை. அறிவுபூர்வமாக அவர்கள் சிந்தித்தால் தானே அவர்களால் அதனைச் செய்ய முடியும்.
மறைந்திருந்த பேரினவாதிகள்
இலங்கையில் பொருளாதார நெருக்கடி மெல்ல மெல்ல தணியத் துவங்க சிங்களப் பேரினவாதத் தலைவர்களும் வெளியில் வரத் துவங்கியுள்ளனர். இப்போது தமிழ் மக்களுக்கு எதிராகவும் தமிழ் தேசத்திற்கு எதிராகவும் மிகப் பெரிய அளவில் அவர்கள் களம் இறங்கியுள்ளனர். சிங்கள மக்களுக்கு பசியும் துயரும் நெருக்கடியும் ஏற்படுகின்ற தருணத்தில் எதனையும் செய்ய முடியாத, எதனையும் சிந்திக்க முடியாத இவர்கள், இலங்கைத் தீவு பொருளாதார நெருக்கடியில் சிக்குவதற்கு மாத்திரமே வழி சமைக்கக் கூடியவர்கள். இப்போது அந்தப் பணியை மீளத் துவங்கியுள்ளனர்.

அண்மையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் கொழும்பு வீட்டை சிங்களப் பேரினவாதிகள் முற்றுகையிட்டு இருந்தனர். “வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதைப்போன்று, சிங்களவர்கள் வட, கிழக்கில் சுதந்திரமாக வாழவேண்டும்.
சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதன் தொடக்கமாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு இல்லத்தின் முன்பாக இவ்வாரம் போராட்டத்தில் ஈடுபடுவோம். இப்போராட்டத்தில் அனைத்து சிங்கள பௌத்தர்களும், இனவாதக்கொள்கையற்ற தமிழர்களும் கலந்துகொள்ளவேண்டும்” என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில அறிவித்துச் சில தினங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
பேரினவாதிகளின் மிரட்டல்
இவ்வாறு அழைப்பு விடுத்து, தமிழ் மக்களுக்கு எதிராக கடும் இனவாத்தை கிளப்பி, குழப்பங்களை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிடுகின்ற, உதயகம்மன்பில அங்கு வருகை தராத நிலையில் பத்திரமுல்ல சீலரத்தின தேரர் சில நபர்களுடன் வந்து, திரு கஜேந்திரகுமாருக்கு எதிராக கோசங்களை எழுப்பியுள்ளார்.
“கஜேந்திரகுமாரை வரச்சொல்லுங்கள். நீங்கள் கஜேந்திரகுமாருக்குப் பயப்படுகிறீர்களா? நீங்கள் அனைவரும் கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரனைப் பார்த்துப் பயப்படுகிறீர்கள். ரணிலும் பயப்படுகிறார். மஹிந்தவும் பயப்படுகிறார். கோட்டாபயவும் அதனால்தான் வெளியேறினார்.” இவ்வாறு அங்கு சீலரத்தின தேரர் குழப்பம் விளைவிக்கும் கருத்துக்களை வெளியிட்டார்.
இதேவேளை மீண்டும் இரண்டாவது நாளாகவும் திரு கஜேந்திரகுமாரின் இல்லம் முற்றுகையிடப்பட்டது. கஜேந்திரகுமாரின் குறித்த இல்லத்தில் அவரது வயதான தாயார் மாத்திரமே இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
வடக்கு கிழக்கில் சிங்களப் பேரினவாதிகளும் அரசும் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு மற்றும் ஒடுக்குமுறைகளை தடுத்தால், கொழும்பில் உள்ள தமிழ் தலைவர்களின் இல்லங்களை முற்றுகையிடுவோம் என்ற பேரினவாதிகளின் இந்த எச்சரிக்கை சாதாரணமானதல்ல. இதில் பல்வேறு விடயங்களும் ஆபத்துக்களும் வெளிப்பட்டு நிற்கின்றன. அத்துடன் இதில் ஈழத் தமிழ் மக்களும் கற்கவும் புரியவும் வேண்டிய விடயங்களும் உள்ளன.
நினைவுபடுத்தப்பட்ட கறுப்பு ஜூலை
அண்மையில் தான் ஜூலை இனப்படுகொலையின் நினைவேந்தலை ஈழத் தமிழர் தேசம் அனுஸ்டித்தது. வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் நாடு கேட்டால், நாடு கேட்டு இராணுவத்துடன் போர் புரிந்தால் தெற்கில் இனப்படுகொலை செய்வோம் என்பதன் வெளிப்பாடாகவே 1983 கறுப்பு ஜூலை இனப்படுகொலை முன்னெடுக்கப்பட்டது.

அதைப் போலவே அனைத்து இனப்படுகொலைகளும் நிகழ்த்தப்பட்டன. இன்றைக்கு கஜேந்திரகுமாரின் இல்லத்தை முற்றுகையிட்டதன் வாயிலாகவும் இதே எச்சரிக்கையையே பேரினவாதிகள் வெளிப்படுத்தியுள்ளனர். முள்ளிவாய்க்காலில் நடந்த பாரிய இனப்படுகொலை, அதற்கான நீதிக்கான போராட்டங்கள் அழுத்தங்கள் தொடர்கின்ற நிலையிலும், பாரிய பொருளாதார நெருக்கடிக்குப் பின்னரும் கூட இப்படி பேரினவாத சிந்தனையுடன் செயற்படுகின்றனர் என்பது மிக்க அதிர்ச்சியானது.
1983இல் கறுப்பு ஜூலைப் படுகொலை இடம்பெற்ற சமயத்தில் தென்னிலங்கையில் இருந்த தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு தமிழர் தேசத்திற்கு விரட்டியடிக்கப்பட்டமையின் வாயிலாக வடக்கு கிழக்கே தமிழர்களின் தாயகம் என்பதை அன்று வலியுறுத்தினர்.
இன்றைக்கும் சிங்களப் பேரினவாதிகள் கொழும்பில் உள்ள தமிழ் தலைவர் ஒருவரின் வீட்டை முற்றுகையிடுவதன் வாயிலாகவும் இது உங்கள் நாடல்ல, வடக்கு கிழக்கே உங்கள் நாடு என்பதை உணர்த்த முற்படுகின்றனரா?
வடக்கு கிழக்கை தளமாகக் கொள்ளுங்கள்
இன்றைக்கு பௌத்த சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்பு இந்த நாடு எப்படி இருக்கிறது என்பதை பற்றி சிந்திக்கச் செய்கிறது. அத்துடன் தமிழரின் தனிநாடு பற்றிய ஆதங்கங்களை மீள கிளறி விடுகின்ற நிலைக்கும் தள்ளுகின்றது.

2009இற்குப் பின்னர் வடக்கு கிழக்கில் ஏற்படுத்தப்படும் ஒடுக்குமுறைகள் தற்போது இன்னமும் தீவிர நிலையை எட்டி வருகின்றது. இதனால் வடக்கு கிழக்கில் பேரினவாதிகளுக்கு எதிராகவும் அவர்கள் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராகவும் போராட்டங்களும் எதிர்ப்புக் குரல்களும் வலுப்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் இப் போராட்டங்களை முடக்குவதற்குரிய தந்திரங்களாக நினைத்து, கொழும்பு தமிழ் தலைவர்களின் இல்லங்களை முற்றுகையிடுவது என்பது தமிழர்களை மீண்டும் தனிநாடு குறித்து சிந்திக்க தள்ளுகின்ற முயற்சியாகவே அமையப் போகின்றது.
அதேவேளை கொழும்பை தளமாக கொள்ளுகின்ற தமிழ் அரசியல்வாதிகளும் இது குறித்து சிந்திக்க வேண்டும். வடக்கு கிழக்கில் தங்களை நிலைப்படுத்துவதன் வாயிலாக சிங்களப் பேரினவாதிகளின் இந்த நோக்கம் மற்றும் அரசியலை எதிர்கொள்வதுடன் அதனை ஒரு ஆயுதமாகக் கொண்டு உலகத்திற்கு எம் நிலையை உணர்த்தவும் வேண்டும்.
நம் தேசமே நமக்குப் பாதுகாப்பு
எந்தவொரு மக்களுக்கும் அவர்களின் சொந்த தேசமே பாதுகாப்பை அளிக்கக்கூடியது. நாம் எந்த தேசத்திற்காக போராடுகின்றோமோ அதில் வாழ்வதும் நிலைகொள்ளுவதுமே பாதுகாப்பனது. இப்படியாக சிங்களப் பேரினவாதிகள் இத்தகைய பிரிவினை எண்ணங்களின் ஊடாகவே தமிழர் தேசம் பற்றிய எண்ணத்தை மீண்டும் மீண்டும் நிர்பந்தித்துக் கொண்டுள்ளனர்.

இன்றும் அரசில் அமைச்சராக இருக்கும் விதுர விக்கிரமநாயக்க கூட வடக்கு கிழக்கில் விகாரைகளை நிர்மாணிக்க எவரும் தடைபோட முடியாது என்று அச்சுறுத்தல் விடுத்துக் கொண்டிருக்கிறார். அதனை அரச தலைவர் ரணிலும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். தமிழ் மக்களோ, தமிழ் தலைவர்களோ சிறிலங்கா தேசத்திற்கும் பௌத்த மதத்திற்கும் சிங்கள மக்களுக்கும் எதிரானவர்களல்ல. பேரினவாதிகளுக்கும் அவர்களின் பேரினவாத சிந்தனைக்குமே எதிரானவர்கள்.
ஈழத் தமிழர்கள் எவராவது தெற்கில் சென்று இந்து ஆலயங்களை புதிததாக நிர்மாணிக்கின்றனரா? கதிர்காமம் போன்ற சைவத் தலங்கள் ஆதி ஈழம் தொட்டு நிலைத்து நிற்பவை. அவைகள் இன்று சிங்கள அடையாளம் பூசப்பட்டு நாம் இழந்து வருபவை. இவைகளை காரணம் காட்டி, வடக்கு கிழக்கில் புதிதாக விகாரைகளை அமைக்க முற்படுவது எவ்வளவு அநியாயமானது? அதனை அரசே நியாயப்படுத்துகிறது. அதனை அமைச்சரே கூறி எச்சரிக்கிறார் என்பது இலங்கை அரசு எதை நோக்கிப் பயணிக்கிறது என்பதை காட்டுகிறதல்லவா?
