யாழில் தவறாக சித்தரிக்கப்பட்ட 16 ஆசிரியைகளின் குழுப் புகைப்படம்: 5 மாணவர்கள் கைது
யாழில் 16 பெண் ஆசிரியைகளின் குழுப் புகைப்படத்தைத் தவறான முறையில் சித்தரித்த குற்றச்சாட்டில் ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், மருதங்கேணி காவல்துறை பிரிவுக்குட்பட்ட உடுத்துறை பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் பணியாற்றிய ஆசிரியர்களின் புகைப்படமே இவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தவறாக சித்தரித்து, சமூக வலைதளங்களில் பரப்பிய குற்றச்சாட்டிலேயே குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னெடுத்த விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாடசாலையில் எடுக்கப்பட்ட ஆசிரியைகளின் குழுப் புகைப்படத்தை எடுத்த மாணவர்கள், அதனை AI தொழில்நுட்பம் மூலம் தவறான முறையில் மாற்றியுள்ளனர்.

பின்னர் அந்தப் புகைப்படங்களை வாட்ஸ்அப் (WhatsApp) குழுக்கள் மூலம் பகிர்ந்துள்ளனர். இது குறித்துப் பாடசாலை நிர்வாகம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மருதங்கேணி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனடிப்படையில் காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விளக்கமறியல்
அவர்கள் இந்த ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (O/L) பரீட்சை எழுதிவிட்டு முடிவுகளுக்காகக் காத்திருப்பவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
காவல்துறையினர் மாணவர்களின் கைபேசிகளை ஆய்வு செய்தபோது, நான்கு மாணவர்களின் கைபேசிகளில் அவ்வாறு மாற்றப்பட்ட தவறான புகைப்படங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்கள் நீதிமன்ற விளக்கமறியல் உத்தரவிற்கு அமைய சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |