வாகனம் செலுத்தும் போது காணொளி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை
பொதுமக்களிடம் வாகனம் செலுத்தும் போது காணொளிகளைப் பார்ப்பதைத் தவிர்க்குமாறு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
விபத்துகளின்றி பாதுகாப்பாக இலக்குகளை அடைய சாரதிகள் முழு கவனத்துடன் வாகனங்களைச் செலுத்த வேண்டும் என்றும் காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
பொது பாதுகாப்புத் தொடர்பான விசேட செய்தியொன்றை வெளியிட்டுள்ள காவல்துறை இதனைக் குறிப்பிட்டுள்ளது.
முக்கியமான எதிர்வினை
அந்த அறிக்கையில், காணொளிகளைப் பார்ப்பதற்காக வீதியிலிருந்து கவனத்தைத் திருப்புவதன் மூலம் எதிரே வாகனம், பாதசாரி அல்லது ஏனைய தடைகளைத் தவிர்ப்பதற்குத் தேவையான முக்கியமான எதிர்வினை நேரத்தை சாரதிகள் இழக்க நேரிடும் எனத் தெரிவித்துள்ளது.

"நீங்கள் பார்க்கும் காணொளியினால் சில வினாடிகள் மட்டுமே வீதியிலிருந்து உங்களது கவனம் திசைதிருப்பப்பட்டாலும், ஆபத்தை உணர்ந்து அதிலிருந்து தப்பிப்பதற்கான மதிப்புமிக்க நேரத்தை இழக்கிறீர்கள்" என காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், சாரதிகள் தங்களது உயிரை மட்டுமன்றி பயணிகள், பாதசாரிகளின் உயிர்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்புடையவர்கள் என்பதையும் நினைவூட்டியுள்ளது.
உயிரை மீண்டும் பெற முடியாது
பயணத்தை நிறைவு செய்த பின்னரே காணொளிகள் மற்றும் பிற பொழுதுபோக்குகளைப் பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ள காவல்துறை, காணொளிகளைப் பின்னர் பார்க்கலாம்; ஆனால் "இழந்த உயிரை மீண்டும் பெற முடியாது" என்பதையும் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளது.

எனவே, வீதியைப் பயன்படுத்தும் அனைத்துத் தரப்பினரும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ள காவல்துறை, விபத்துகளின்றி பாதுகாப்பாக இலக்குகளை அடைய சாரதிகள் முழு கவனத்துடன் வாகனங்களைச் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |