அநுர ஆட்சியில் கடன் சுமை அதிகரிப்பு...! வெளியான அறிக்கை
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்தபின்னர் அரசாங்கத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் பாரியளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை மனித உரிமைகள் மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த ஆண்டில் அரசாங்கம் 8.094 பில்லியன் டொலர்களைக் கடனாகவும் வட்டியாகவும் செலுத்தியுள்ளது என்ற தகவல் பரவி வருகிறது இது ஒரு தவறான தகவலாகும்.
வெளிநாட்டுக் கடன்
ஆனால் உண்மை என்னவென்றால் இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் மட்டும் நாட்டின் வெளிநாட்டுக் கடன் 788 மில்லியன் டொலர்களும் உள்நாட்டுக் கடன் 490 பில்லியன் ரூபாயும் அதிகரித்துள்ளது.
அரசாங்க கடன் முகாமைத்துவத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பதிவுகளின்படி வெளிநாட்டுக் கடன்களுக்காகச் செலுத்தப்பட்டுள்ள அசல் தொகை 5.98 மில்லியன் டொலர்கள் ஆகும்.

கடனுக்கான வட்டி 2.11 மில்லியன் டொலர்கள் ஆகும். மொத்தம் 8.094 மில்லியன் ஆகும். இது உண்மையாக இருப்பினும் இந்தத் தொகை டொலர்களில் செலுத்தப்படாமல் இலங்கை ரூபாயில் செலுத்தப்பட்டுள்ளது.
செலுத்தப்பட்ட தொகைக்குச் சமமான ஒரு தொகை, vzதிறைசேரிப் பத்திரங்கள் மற்றும் பிணைமுறிகளை வெளியிடுவதன் மூலம் உள்நாட்டுக் கடனாகத் திரட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டுக் கடன் தீர்வு
இலங்கை அரசாங்கம் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கடன் மறுசீரமைப்புக்காக 530 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்தியுள்ளது.
இதில் பலதரப்பு நிறுவனங்களுக்கு 234 மில்லியன் அமெரிக்க டொலர்களும் இருதரப்புக் கடன் வழங்குநர்களுக்கு 207 மில்லியன் அமெரிக்க டொலர்களும் தனியார் கடன் வழங்குநர்களுக்கு 89 மில்லியன் அமெரிக்க டொலர்களும் அடங்கும்.

இந்த 530 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தவிர இந்தக் காலாண்டில் வேறு எந்த வெளிநாட்டுக் கடனோ அல்லது வட்டி செலுத்துதலோ டொலர்களில் மேற்கொள்ளப்படவில்லை.
2026 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் பலதரப்பு மற்றும் இருதரப்புக் கடன் வழங்குநர்களுக்கு 2.7 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்த வேண்டியுள்ளது.
இதில் 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஜூன் 2026 இற்குள் செலுத்தப்பட்டுள்ளது; மேலும் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்த ஆண்டின் அடுத்த 6 மாதங்களில் செலுத்தப்பட வேண்டியுள்ளது.
வெளிநாட்டுக் கடன் அதிகரிப்பு
கடந்த வாரம் இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 695 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றது.
எதிர்காலத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 450 மில்லியன் அமெரிக்க டொலர்களும் உலக வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்களும் பெறப்படவுள்ளன.

கூடுதலாக திட்டக் கடனாக மேலும் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்படவுள்ளன சுருக்கமாகச் சொன்னால் இந்த ஆண்டு செலுத்தப்பட வேண்டிய கடன் மேற்குறித்த டொலர்களில் இருந்து செலுத்தப்படும்போது வேறு எந்த நிலுவைத் தொகையையும் எதிர்பார்க்க முடியாது.
இந்த வரவுகள் மற்றும் கொடுப்பனவுகள் அனைத்தும் கடன் மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பாக 2022 – 2023 இல் செய்யப்பட்ட ஒப்பந்த உடன்படிக்கைகளாகும்.
உள்நாட்டுக் கடன் கொடுப்பனவுகள்
இலங்கை மத்திய வங்கி மற்றும் திறைசேரியால் முதிர்வடைந்த திறைசேரிப் பத்திரங்கள், திறைசேரிப் பிணையங்கள் மற்றும் உள்ளூர் வங்கிகளுக்கான திட்டக் கடன்களாகச் செலுத்தப்பட வேண்டிய ரூபாய்க் கடன்களின் தொகையைக் கீழேயுள்ள அட்டவணை காட்டுகிறது.
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் திறைசேரிப் பத்திரங்கள், பிணைமுறிகள் மற்றும் உள்ளூர் வங்கிகளுக்கான திட்டக் கடன்களுக்காக 7.56 பில்லியன் அமெரிக்க டொலருக்கு இணையான ரூபாய் தொகை செலுத்தப்பட்டுள்ளது.

இதில் 7.56 பில்லியன் அமெரிக்க டொலரில் 1.59 பில்லியன் டொலருக்கு இணையான ரூபாய் வட்டியாகச் செலுத்தப்பட்டுள்ளது. 5.975 பில்லியன் அமெரிக்க டொலருக்கு இணையான ரூபாய் தொகை உள்நாட்டுக் கடன் தவணைகளாகச் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு செலுத்தப்பட்ட பணத்தை மீட்கும் பொருட்டு திறைசேரியானது உள்நாட்டுத் திறைசேரிப் பத்திரங்கள் மற்றும் பிணைமுறிகளைப் புதுப்பித்துள்ளது.
எனவே இந்தக் கொடுப்பனவுகளால் நாட்டின் மொத்தக் கடனில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.
திரட்டப்பட்ட கடன்
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளியிடப்பட்ட திறைசேரிப் பத்திரங்கள் மற்றும் பிணைமுறிகளின் (ரூபாய் கடன்) மதிப்பு 1,210 பில்லியன் ரூபா (3.84 பில்லியன் அமெரிக்க டொலர்) ஆகும்.
திறைசேரிப் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் இலங்கை மேலும் 720 பில்லியன் ரூபா (2.30 பில்லியன் அமெரிக்க டொலர்) புதிய கடனைப் பெற்றுள்ளது.

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் புதிதாகத் திரட்டப்பட்ட உள்நாட்டுக் கடனின் அளவு 1,930 பில்லியன் ரூபா (6.04 பில்லியன் அமெரிக்க டொலருக்குச் சமம்) ஆகும்.
இந்த ஆண்டின் முதல் சில மாதங்களில் இலங்கை சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து ஏறக்குறைய 1,500 மில்லியன் அமெரிக்க டொலரைப் பெற்றுள்ளது என்ற உண்மையை அரசாங்கம் மறைத்து வருகிறது.
மேலும் 1,930 பில்லியன் ரூபா (6.04 பில்லியன் அமெரிக்க டொலர்) கடன்கள் உள்நாட்டிலேயே பெறப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கம் 2022-இல் திவாலானது ஆனால் அது தனது பலதரப்புக் கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறவில்லை.
பலதரப்புக் கடன்
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில்கூட பலதரப்புக் கடன்களில் எந்த நிலுவைத் தொகையும் இருக்கவில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின்படி கடன் இருப்பை எளிதில் கண்டறியும் பொருட்டு உள்நாட்டில் பெறப்பட்ட ரூபாய்க் கடன்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட திகதியிலும் நிலவும் மாற்று விகிதங்களின்படி பதிவு செய்யப்படுகின்றன.

இது தகவல் பரிமாற்ற வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு ஒப்பந்தம் மட்டுமே இது ரூபாய்க் கடனை டொலர்களிலோ அல்லது டொலர் கடனை ரூபாயிலோ தீர்ப்பதைக் குறிக்காது.
ரூபாய்க் கடனை ரூபாயிலும் டொலர் கடனை டொலர்களிலும் கணக்கிடுவதே மிகவும் துல்லியமான முறையாகும்.
அதன்படி 2024 ஆம் ஆண்டின் இறுதியில் தீர்க்கப்பட வேண்டிய உள்நாட்டுக் கடனின் அளவு 18,883 பில்லியன் ரூபாவிலிருந்து 490 பில்லியன் ரூபா அதிகரித்து 19,373 பில்லியன் ரூபா ஆக உயர்ந்துள்ளது.
மார்ச் 31, 2026 நிலவரப்படி வெளிநாட்டுக் கடன் இருப்பு 36,680 மில்லியனிலிருந்து 37,468 மில்லியன் டொலர்களாக 788 மில்லியன் டொலர்கள் அதிகரித்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 17 மணி நேரம் முன்