நண்பர்கள் - குடும்பத்தினர் தயவில் வாழும் ராஜித! தொலைக்காட்சியில் குமுறல்
தனக்கு தற்போது நிலையான வருமானம் எதுவும் இல்லை என்றும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவில் வாழ்வதாகவும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தனது தற்போதைய நிதி நிலைமை குறித்த தனது கருத்துக்களை வெளிப்படுத்திய அவர், தற்போது தான் பயன்படுத்தும் வாகனம் ஒரு நண்பரால் வழங்கப்பட்டது என்றும், தான் வசிக்கும் வீட்டின் வாடகையைக்கூட ஒரு நெருங்கிய நண்பர் செலுத்துவதாகவும் கூறியுள்ளார்.
அரசியலில் நுழைவதற்கு முன்பு நாட்டில் மிகவும் வெற்றிகரமான பல் மருத்துவராக தான் பணியாற்றியதாகவும் அக்காலத்தில் மிஸ் சிறிலங்கா போட்டியாளர்கள் மற்றும் பிரபல நடிகர், நடிகைகள் உட்பட ஏராளமானோர் தன்னிடம் சிகிச்சை பெற்றதாகவும், அதன் மூலம் மிக அதிக வருமானம் ஈட்டியதாகவும் ராஜித குறிப்பிட்டுள்ளார்.
இழக்கப்பட்ட வருமானம்
எனினும், தான் அரசியலில் நுழைந்த பிறகு அந்த வருமான ஆதாரங்கள் அனைத்தையும் இழந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இப்போது எனக்கு ஒரு பைசா கூட வருமானம் இல்லை.என் மனைவி ஒரு சிறப்பு மருத்துவர், அதனால் அவருக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது.
என் பாட்டியிடமிருந்து மரபுரிமையாகப் பெற்ற ஒரு சிறிய தோட்டமும் எனக்கு உள்ளது, அது ஓரளவு வருமானத்தைத் தருகிறது. வாழ்வதற்குப் போதுமான பணம் எங்களிடம் இருந்தாலும், அரசியல் செய்வதற்கு அந்தப் பணம் போதாது. என் நண்பர்கள்தான் என் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புகிறார்கள், வாடகையையும் செலுத்துகிறார்கள்,” எனக் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |