இலங்கை அரசமைப்பின் கீழ் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது: தமிழகத்தின் முக்கிய அரசியல் புள்ளி பகிரங்கம்
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
குறித்த அறிக்கையில், இது சாதாரண உள்நாட்டுப் போர் அல்ல, திட்டமிடப்பட்ட ஓர் இனப்படுகொலை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1948ஆம் ஆண்டு முதல் இன்று வரை எந்தவொரு சிங்கள அரசும் தமிழர்களின் உரிமைகளை வழங்க முன்வரவில்லை என்பதால் இலங்கை அரசமைப்பின் கீழ் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவது வீண் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொது வாக்கெடுப்பு
இந்தக் கொடூரத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமானால் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் பன்னாட்டு நீதி விசாரணை நடத்தப்பட்டு போர்க்குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஈழத் தமிழர்களிடம் ஐநா சபையின் மேற்பார்வையில் ஒரு சுதந்திரமான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அதன் மூலம் கிடைக்கும் முடிவை சர்வதேச சமூகம் நடைமுறைப்படுத்துவதே உண்மையான நீதியாகும் எனக் கோரியுள்ளார்.
தனித் தமிழீழமே ஈழத் தமிழர்களின் வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் உரிய ஒரே தீர்வு என்ற அவர்களின் விருப்பத்தை உலகம் அங்கீகரிக்க இதுவே சரியான வழி என்றும் தமிழர்கள் இழந்த நிலத்தையும் உரிமையையும் மீட்கும் வரை பாமக தோளோடு தோள் நின்று போராடும் என்றும் அவர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
