காஸா நிவாரணக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் : இஸ்ரேல் மீது கடும் குற்றச்சாட்டு
காஸாவிற்கு (Gaza) உதவி பொருள்கள் ஏற்றிச் சென்ற கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதலை இஸ்ரேல் (Israel) இராணுவம் நடத்தியதாக அந்தப் பொருள்களைக் கொண்டுவந்த சேவை அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து ஃப்ரீடம் ஃபிளோட்டிலா கூட்டணி என்ற அந்த அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
நிவாரணப் பொருள்
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நிவாரணப் பொருள்களுடன் காஸாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ‘கான்ஷன்ஸ்’ கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
மால்டாவிற்கு அருகிலுள்ள சா்வதேச கடல் எல்லையில் அந்தக் கப்பல் இருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கப்பலின் மின் உற்பத்தி மையத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இதன் விளைவாக, கப்பலின் உடலில் பெரிய துளை ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்த சேதத்தால் கப்பல் மூழ்கும் அபாயத்தில் உள்ளதுடன் இந்தத் தாக்குதலை இஸ்ரேல் இராணுவம்தான் நடத்தியுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், இந்தக் குற்றச்சாட்டுக்கான ஆதாரம் எதையும் அந்த அமைப்பு வெளியிடவில்லை என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவசர எச்சரிக்கை
இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, கப்பல் விடுத்த அவசர எச்சரிக்கை சமிஞையைக் கேட்டு அருகிலிருந்த இழுவைப் படகு ஒன்று உதவிக்கு விரைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் போது கான்ஷன்ஸ் கப்பலில் 12 பணியாளா்கள் உள்பட 16 போ் இருந்தாகவும் அவா்கள் கப்பலை விட்டு வெளியேற மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல் காரணமாக கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்த அதிகாரிகள், கப்பலில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாவும் யாரும் காயமடையவில்லை என்றும் குறிப்பிடப்படுகின்றது.
கடந்த 2023 அக்டோபா் ஏழாம் திகதி இஸ்ரேலில் ஹமாஸ் படையினா் சுமாா் 1,200 பேரை படுகொலை செய்து, 251 பேரை பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனா்.
அதில் இருந்து ஹமாஸ் படையினரை ஒழித்துக்கட்டுவதாக காஸாவில் தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல், போா் தொடங்கியதில் இருந்தே அந்தப் பகுதிக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அனைத்து நிவாரணப் பொருள்கள் செல்வதையும் தடுத்துவருகிறது.
மனிதாபிமான நெருக்கடி
இதனால் இந்த 19 மாத கால போரில் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே காஸாவில் இஸ்ரேல் தாக்குதலால் 52,000 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனா்கள் (பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள்) உயிரிழந்த நிலையில், இஸ்ரேலின் இந்தத் தடையால் அத்தியாவசியப் பொருள்கள் பற்றாக்குறை ஏற்பட்டு அங்கு மனிதப் பேரழிவு ஏற்படும் என்று ஐ.நா. எச்சரித்து வருகின்றது.
இந்தச் சூழலில், காஸாவுக்குள் நிவாரணப் பொருள்களை ஏற்றிவந்த கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் போருக்கு முன்னரே, கடந்த 2010 இல் இஸ்ரேல் இராணுவத்தின் காஸா முற்றுகையை மீறி அந்தப் பகுதியை நோக்கிச் சென்ற மாவி மா்மரா என்ற கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி ஒன்பது பேரைக் கொன்றது நினைவுகூரத்தக்கது.
எனவே, தற்போது கான்ஷன்ஸ் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதும் இஸ்ரேல் இராணுவமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
