வடக்கில் போதைப்பொருள் என்பது ஒரு திட்டமிட்ட இன அழிப்பே..! ரவிகரன் குற்றச்சாட்டு (காணொளி)
“வடக்கு மாகாணத்தில் மாணவர்கள் மத்தியிலும் போதைப்பொருள் பாவனையானது அதிகரித்துள்ளமை ஒரு திட்டமிட்ட இன அழிப்பே“ என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
நேற்று(12) மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
போதைப்பொருள் பாவனை

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“2009 ஆம் ஆண்டிற்கு முன்னரான காலப்பகுதியில் போதைப்பொருள் பற்றி கதைக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. அதற்குப் பின்னரான காலப்பகுதியிலேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
ஆயிரக்கணக்கான படையினரும் காவல்துறையினரும் பணியில் இருக்கும் போது இவ்வாறான சம்பவங்கள் பதிவாகுவது மிகவும் மோசமான நிலைமை ஆகும்.
சண்டை இடம்பெறும் போது மட்டும் இன அழிப்பு இடம்பெறவில்லை எங்களுடைய பூர்வீக நிலங்களை அபகரிப்பதன் மூலமும், எங்களுடைய மதங்களை அழித்து பௌத்த மதத்தை திணிப்பதன் மூலமும் மற்றும் போதைப் பொருள் பாவனையை ஊக்குவிப்பதன் மூலமும் இன அழிப்பே மேற்கொள்ளப்படுகின்றது. ”
சிங்களக் குடியேற்றம்

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத சிங்களக் குடியேற்றம் ஒன்றை நிறுவுவதற்கான திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது எனவும் இது கடற்றொழில் அமைச்சின் ஆதரவில் இடம்பெறுவதாகவும் கடற்றொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன் கொக்குத் தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிக்கான தொல்பொருள் திணைக்களத்தின் பாதீடு தொடர்பிலும், இது தொடர்பில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தொடர்ந்து போரடி வருகின்றனர்.
இவர்களுக்கு நீதியான ஒரு தீர்வு கிடைக்க சரியான முறையில் பணி மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தார்.
மேலும்“ தொல்பொருட்கள் சம்பந்தமாகவும் தமிழர்களின் பூர்வீக பொருளாதார சின்னங்கள் சம்பந்தமாகவும் சரத் வீரசேகர, சவேந்திரா சில்வா போன்றோர் கூறுகின்ற கருத்துக்கள் மிகவும் மன நோயாளிகள் கூறுகின்ற கருத்துக்கள் போன்றவை, உண்மையிலேயே அரசியலுக்கு பொருத்தமில்லாத இவர்கள் மனநோய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட வேண்டியவர்கள்“ எனவும் மேலும் தெரிவித்தார்.