வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு அரசாங்கத்தின் நற்செய்தி
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கான சுங்கவரிச் சலுகைகளை மேலும் அதிகரிப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பாக அண்மையில் (14) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டதாக வெளிநாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டம், குறிப்பாக உத்தியோகபூர்வ வங்கி வழிகள் ஊடாக பணத்தை நாட்டிற்கு அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதிகப் பயன்களை வழங்கும் வகையில் தற்போதைய முறையை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
கவனம் செலுத்தப்பட்ட முக்கிய விடயங்கள்
அதன்போது, சுங்க நடைமுறைகளை எளிதாக்குதல், சுங்கவரிச் சலுகைகளை வெளிநாட்டுப் பணப் பரிமாற்றப் பதிவுகளுடன் இணைத்தல், கடன் வசதிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துதல் மற்றும் நிதி அமைச்சு, மத்திய வங்கி, இலங்கை சுங்கம், வர்த்தக வங்கிகள் மற்றும் லங்கா ரெமிட் (Lanka Remit) ஆகியவற்றிற்கு இடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக பிரதி அமைச்சர் ஹேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.

இந்த முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பெறுமதிமிக்க பங்களிப்பை அங்கீகரிப்பதோடு, சுங்கவரிச் சலுகைகளை மிகவும் எளிதாக அணுகக்கூடியதாகவும், வெளிப்படையானதாகவும் மற்றும் நடைமுறைக்கு உகந்ததாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |