உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சாட்சிகளை மறைத்த காவல்துறை பரிசோதகர் தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் கைதான பிரதான காவல்துறை பரிசோதகர் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் ஜனவரி மாதம் 18 திகதி வரை மறுவிசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வழக்கு விசாரணைக்காக எடுக்கப்பட்ட வேளை பிரதிவாதி சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் கடந்த தவணையின் போது குறித்த வழக்கினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தனர்.
மறு தவணையிடப்பட்ட வழக்கு
இதற்கமைய குறித்த வழக்கினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் வழக்கினை நெறிப்படுத்திய அரச சட்டவாதி மன்றிற்கு தெரிவித்தார்.
மேலும் குறித்த விசாரணையின் போது மன்றில் பிரதான பரிசோதகரின் கைது தொடர்பில் ஆட்சேபனை முன்வைத்ததுடன் பிரதிவாதியான காவல்துறை பரிசோதகரை குறித்த வழக்கில் இருந்து பிணையில் விடுதலை செய்யுமாறு விண்ணப்பங்களை முன்வைத்திருந்தனர்.
இதனையடுத்து மீண்டும் நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸினால் எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதிக்கு குறித்த வழக்கு மறுதவணை இடப்பட்டுள்ளது.
தொடர் குண்டு வெடிப்பு
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சம்பவமாக கல்முனை சாய்ந்த மருது பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்புக்கள் குறித்த விசாரணைகளில் பிரதான காவல்துறை பரிசோதகர் அபூபக்கர் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பிலான சாட்சிகளை மறைத்தமை தொடர்பில் அவரைக் கைது செய்ததாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்திருந்தனர்.
சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர் அம்பாறை காவல்துறை உப காவல்நிலையத்தின் பொறுப்பதிகாரியாக செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.



