கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்கப்படவுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் தொடர்பான காவல்துறை விசாரணைகளுக்கு கத்தோலிக்க திருச்சபையாலும் ஒத்துழைப்பு வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதிபர் ஊடக மையத்தில் நேற்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
செயல்திறன்மிக்க சேவைகள்

''காவல்துறை அதிகாரிகளின் நியமனங்களின்போது, அரசியல் தலையீடுகள் இடம்பெறுவதைத் தடுத்துள்ளதுடன், கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்த காவல்துறையினரின் பல நலன்புரி சேவைகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அரசியல் தலையீடுகள் எதுவுமின்றி காவல்துறை திணைக்களம் தற்போது சுயாதீனமாக செயற்படுகின்றது.
இணையவழி ஊடாக கடவுச் சீட்டுகளை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் பொதுமக்களுக்கு செயல்திறன்மிக்க சேவைகளை வழங்கும் நோக்கில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தில் செயல்படுத்தப்படும் தொழில்நுட்ப உபகரணங்களை நவீனமயப்படுத்த அவசியமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அண்மைக்காலமாக அரச சார்பற்ற நிறுவனங்களைப் பற்றி அதிகம் பேசப்படுகிறது. இது தவிர இந்நாட்டில் இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் பதிவு செய்யப்படாத அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கையில் இனிமேல் செயற்பட முடியாது.
பாதாள உலகக் குழுக்களை ஒழித்தல்

தற்போது பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதுடன், அவர்கள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்வதுடன், குறிப்பாக போதைப்பொருள் தொடர்பாக இடம்பெறும் மோதல்களே இவ்வாறு அவர்கள் குழுக்களாகப் பிரிந்து தாக்குதல்களில் ஈடுபடுவதற்குக் காரணமாக அமைகின்றது.
பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.
பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு செயலையும் செய்ய அனுமதிக்க போவதில்லை.'' என்றார்.