அசாத் மௌலானாவிடம் வாக்குமூலம்! விசாரணைக்கு தயாராகிறது குற்றப்புலனாய்வு துறை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொர்பான விசாரணைகளில் அடுத்தக்கட்டமாக, முக்கிய சாட்சியாளரான அசாத் மௌலானாவை விசாரிப்பதற்கான நகர்வுகளை இலங்கை குற்றப் புலனாய்வு துறை முன்னெடுக்கவுள்ளது.
தாக்குதல் இடம்பெற்று ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டுக்குள் இந்த விசாரணையை நிறைவுசெய்து குற்றவாளியை அறிவிக்கபோவதாக குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள பின்னணியில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது பிரான்ஸில் உள்ள அசாத் மௌலானாவின் பாதுகாப்பிற்காக, தூதரகம் மூலம் zoom தொழில்நுட்பத்தில் வாக்குமூலங்களைப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய விசாரணை
மேலும், இந்த தாக்குதல்கள் குறித்த முந்தைய விசாரணைகளால் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் செயலாக்கத்தை மேற்பார்வையிட ஒரு புதிய குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் அப்போதைய தேசியப் பாதுகாப்பு மீதான துறைசார் மேற்பார்வைக் குழு ஆகியவற்றால் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் நீடித்த பொறிமுறை இல்லாதது குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரிந்துரைகளைச் செயல்படுத்தவும், தடுப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தவும் 2021 மே மாதத்தில் அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தாலும், அவற்றின் செயலாக்கத்தை மதிப்பிடுவதற்கோ அல்லது உறுதி செய்வதற்கோ எந்தவொரு பயனுள்ள அமைப்பும் நடைமுறையில் இல்லை புதிதாக அங்கீகரிக்கப்பட்ட இந்த பொறிமுறையானது ஜனாதிபதி செயலகத்தின் மேற்பார்வையின் கீழ் செயல்படும் என்றும், இதில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு நிபுணர்கள், தொடர்புடைய அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |